Saturday, April 10, 2010

நித்யானந்தம் பரமானந்தம்






“அமெரிக்கா போறச்சே ஜீன்ஸ் போட்டுண்டு நைட் க்ளபுக்கெல்லாம் போவாராமே.”

“நம்மள எல்லாம் ஜன்னல தொறக்கச் சொல்லிட்டு அவர் கதவ சத்திக்கிட்டார்.”

“தட் கய் ஹாஸ் எ குட் டேஸ்ட் பார் வுமன். எல்லாமே வொளப்சஸ் லேடீஸ். லக்கி சாப்.”

ரவி தன் முன்னால் திறந்து வைத்திருந்த டிஃபன் பாக்சிலிருந்து ஒரு கரண்டி தயிர் சதாம் எடுத்து வாயில் போட்டுவிட்டு ஒரு மாங்காய் பற்றையை கடித்துக்கொண்டான். சுற்றிலும் பேசப்பட்டுக்கொண்டிருந்த எல்லா பேச்சுக்களின் பேசும்பொருள் அந்த இளஞ்சாமியாராயிருந்தார். படித்தவற்றையும், பார்த்தவற்றையும், சொந்தச் சரக்கையும் இறக்கிவைத்தவாறு தக்காளி சாதம் எலுமிச்சை சதாம் என்று சாப்பிடுக்கொண்டிருந்தார்கள் அந்த பத்திரிக்கை அலுவலகத்தில் குப்பை கொட்டுபவர்கள்.

“மூடர்கள் இருக்கிரவரை இந்த மாதிரி ஆசாமிகளுக்குக் கொண்டாட்டம் தான். கடவுளுக்கும் நமக்கும் நடுவுல எதுக்கு மீடியேட்டர்?” மூன்று மேஜை தள்ளி அமர்ந்திருந்த ஜகத்ரட்சகன் கேள்வி கேட்க ரவிக்கு தயிர்சாதம் தொண்டையை அடைத்தது.

“சரியாய் சொன்னீங்க தலைவரே. யாருக்கு புரியுது இந்த காலத்துல. வாழ்க்கைய அதனோட ஏற்ற இறக்கத்தோட சந்திக்கத் துணிவில்லாம ஒரு சங்கடம்னு வரும்போது சாய ஒரு தூண் அழ ஒரு தோள்னு போய் ஒட்டிக்கராங்க. சாமியார்களும் மனுஷங்க தானே. அவங்க கூட்டம் கூடும்போது அத பொருளாதார ரீதியாவும் மற்ற ரீதிகளிலும் உபயோகிச்சுக்கராங்க. அவங்கள சொல்லி பிரயோசனமில்ல. நாம மாறணும்.” குருமூர்த்தி ஜகத்ரட்சகனை வழிமொழிந்து பேசினார்.

ரவி டிஃபன் பாக்சில் மிச்சமிருந்த தயிர் சாதத்தை வழித்து வாயில் போட்டுக்கொண்டு எழுந்தான்.

மதியத்திற்கு மேல் வேலையில் மனம் ஒட்டவில்லை. அவன் மனைவி சத்யப்ரேமா ஸ்ரீ ஸ்ரீ சக்ரகலாதரரின் அதிதீவிர பகத்தை. திருமணத்திற்கு பின் தான் ஆஷ்ரமம் போகத் தொடங்கினாள். முதலில் ஒரு பொழுதுபோக்கு வேலையாயிருந்தது பின்பு ஒரு அதிதீவிர ஈடுபாட்டு விஷயமானது. ரவிக்கு கடவுள் நம்பிக்கையே கூட ஜுரம் போல் வந்துவந்து போகும் சமாச்சாரம். சாமியர்களெல்லம் சுத்த அலர்ஜி. ஒருமாதிரியாய் ஆறு மணியானதும் கடையை சாத்திவிட்டு வீட்டிற்குக் கிளம்பினான். வாசல் கதவில் பூட்டு போடப்பட்டிருந்தது. பூந்தொட்டிக்குப்பின்னால் கை விட்டுத்தழாவி சாவி எடுத்துக் கதவை திறந்து நுழைந்தன். சத்யப்ரேமா ஆஷ்ரமம் போயிருக்கவேண்டும். புதன் கிழமைகளில் தவறாது போய் குரு பூஜையில் கலந்து கொள்ளுவாள்.

ரவி கொஞ்சம் நேரம் பத்திரிகை படித்து நாற்காலியில் உட்கார்ந்தபடியே கண் அயர்ந்தான். அரை மணிநேரம் கழித்து வாசல் கதவு தட்டப்படும் சப்ததில் எழுந்துகொண்டு திறந்து பாராக்க சத்யப்ரேமா நின்றிருந்தாள்.

“என்ன கதவு திறக்க இத்தனை நேரம்? தூங்கிட்டிருந்தீங்களா?”

“உம்.”

“இன்னைக்கு குரு பூஜைல புதுசா ஒரு பட்டு பாடினா. அப்பப்பா சிலிர்த்துக்கிச்சு.” சொல்லியபடி அவள் உடை மாற்றிக்கொண்டு சமையலறையில் நுழைந்தாள்.

“ஜெய ஜெய ஸ்ரீ சக்ரகலாதராய. ஜெய ஜெய ஸ்ரீ குருவே நம.” பாடிக்கொண்டே பூரிக்கு மாவு பிசைந்தாள்.

ரவியும் சமையலறையில் நுழைந்து மேடையில் சாய்ந்து நின்றுகொண்டான்.

“இந்த ஆஷ்ரம போக்குவரத்து கொஞ்சம் குரைச்சுக்கோயேன் ப்ரேமா. சாமியார்கள் பற்றி ஊரெல்லாம் ஒரே சிரிப்பா சிரிக்கிராங்க. உன்னோட சுவாமி பத்தி எதுவும் பேச்சு இல்லை. இருந்தாலும் நாம ஜாக்ரதையா இருக்கணமோலியோ? ரவி அவளிடம் கேட்க அவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துப்பார்த்தாள்.

“அதுக்கில்லை ப்ரேமா. ஆன்மீகம்ங்கறது ஒரு அந்தரங்கமான விஷயம். கடவுளுக்கும் நமக்கும் நடுவுல எதுக்கு மீடியேட்டர்?”

“அனா ஆவனா கத்துத்தரதுக்கே குரு தேவைப்படும்போது ஆன்மீகம் காத்துக்க குரு வேண்டாமோ? சமையல் மாதிரி புஸ்தகம் பார்த்துச் செய்யற வேலையா இது? நிறைய சூட்சுமங்கள் இருக்கு. அத எடுத்துச் சொல்ல தான் குரு சாமியாரெல்லாம். ஒரு ஆசிரியர் அயோக்யனா போயிட்டதாலே கல்வி முறையே தப்புன்னு ஆயிடுமா? நாமளாவே வீட்ல உக்காந்து எல்லாத்தையும் கத்துக்கலாம்னு பள்ளிக்கூடம் போகாம இருந்திர முடியுமா?”

அவள் கேள்விக்கு ஜகத்ரட்சகன் என்ன பதில் சொல்லுவான் என்று யோசித்துப்பார்த்தான் ரவி. உன்னிடம் பேசி ப்ரயோசனமில்லை என்பது போல் வந்து ஹாலில் அமர்ந்துகொண்டான்.

“இப்படி மோட்டுவளைய பார்த்துண்டு உட்கார்ந்திருகறதுக்கு ரெண்டு பூரி தேச்சு தரலாமோலியோ?” அவள் சமையலறையிலிருந்து கத்த அவன் காதில் போட்டுக்கொள்ளாமல் தொலைகாட்சியை உயிர்ப்பித்தான்.

இரவு படுக்கையில் ‘தட் கய் ஹாஸ் எ குட் டேஸ்ட் பார் வுமன். எல்லாமே வொளப்சஸ் லேடீஸ்.’ மதியம் சாப்பாட்டு மேஜையில் யாரோ சொன்னது நினைவிற்கு வந்தது. இவள் வேறு கொழுகொழுவென்றிருகிறாள். யோகா கற்றுத்தருகிறேன் என்று தோளில் கைபோட்டால் கூட விலக்கிவிடத்தெரியாத அப்பாவிப் பெண்ணாயிருகிறாள். சனிக்கிழமை ஒரு எட்டு சக்ரகலாதரரின் ஆஷ்ரமம் வரை போய் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உறங்கிப்போனான்.

அன்றிரவு அவன் கனவில் வெள்ளை வெளேரென்ற ஒரு அறை வருகிறது. அந்த அறையின் தரை முழுவதும் மெத்தென்ற படுக்கை விரிக்கபடிருகிறது. அறை கதவு திறந்து கொள்ள கண்கூசும்படியாய் வெளிச்சம் அறை முழுவதும் நிறைகிறது. சக்ரகலாதரர் ஜீன்ஸ் பான்டும் பனியனும் அணிந்தபடி உள்ளே நுழைய தொடர்ந்து சத்யப்ரேமா நுழைகிறாள். சக்ரகலாதரர் படுக்கையில் படுத்துக்கொள்ள சத்யப்ரேமா ஒரு டிஃபன் பாக்ஸ் திறந்து அதிலிருந்த பூரியை விண்டு விண்டு ஊட்டி விடுகிறாள். தொட்டுக்கொள்ள மாங்காய் ஊறுகாய் இல்லையா என்று சக்ரகலாதரர் கேட்க சப்தமாக சிரிக்கிறாள் அவள். சக்ரகலாதரர் அவள் இடுப்பை கிள்ள அவள் ஜெய ஜெய ஸ்ரீ சக்ரகலாதராய. ஜெய ஜெய ஸ்ரீ குருவே நம என்று பாடுகிறாள். அறையின் ஒரு மூலையில் அமர்ந்து பூரிக்கு மாவு பிசைந்தபடி ரவி இதை பார்த்துக்கொண்டிருகிறான்.

அடுத்த நாள் காலையில் எழுந்து கொண்ட ரவி இரவில் கண்ட கனவினால் உந்தப்பட்டு உடனே சக்ரகலாதரரின் ஆஷ்ரமம் வரை போய் பார்த்துவிடுவதென்று முடிவு செய்து அலுவலகம் கூப்பிட்டு விடுப்பு சொல்லிவிட்டு கிளம்பினான். சிறுவாணி செல்லும் சாலையிலிருந்து பரிந்து மலைபாம்பின் உடல் போல நீண்டு கிடந்த மண் பாதையில் நாற்பது நிமிடம் பயணிக்க ஜீவன் முக்தி பீடம் கண்ணுக்குக் கிடைத்தது.

மலை அடிவாரத்தில் நான்குபுறமும் உயர்ந்து வளர்ந்த மரங்களுக்கு நடுவே ஒரு உயர்ரக ரிஸார்ட் போல் நின்றிருந்தது ஆஷ்ரமம். வாரநாளானதால் அதிகம் கூட்டமில்லை. வாகனத்தை பார்க்கிங்கில் போட்டு விட்டு உள்ளே நுழைய வெள்ளை உடையில் கொஞ்சம் ஆட்கள் மேலும் கீழுமாய் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. எல்லோரும் தலைமுடியை சுத்தமாய் மழித்திருந்தர்கள். இவனை பார்த்து அமைதியாய் சிரித்தபடி நகர்ந்தார்கள். ரவி இலக்கில்லாமல் ஆஷ்ரமத்தை வலம் வந்தான். சிலர் தூண்களில் சாய்ந்து தியானத்திலிருந்தர்கள். அதில் கொஞ்சம் பேர் சாமி வந்தது போல் முன்னும் பின்னுமாய் மெதுவாய் ஆடிக்கொண்டிருந்தார்கள். அவர்களை கவனமாய் கடந்து செல்ல ஒரு பெரிய தெப்பக்குளம் தெரிந்தது. ஐம்பது படிகள் இறங்கிப்போகவேண்டிய குளம். குளத்தின் நடுவே செம்பினாலான ஒரு சிவலிங்கம் மூழ்கிக்கிடப்பது தெரிந்தது. இரண்டு பேர் அந்த லிங்கத்தைப் பற்றி நீரில் மிதந்தபடி குப்புற படுத்துக்கிடந்தார்கள்.

இன்னும் கொஞ்சம் தூரம் நடக்க ஒரு ராட்ஷச பானையை கவிழ்த்துப்போட்டது போல் ஒரு கட்டிடம் தெரிந்தது. அதற்கு வலதுபுறம்ச் சிறைச்சாலைகளில் இருப்பது போல் பனிரெண்டு அடி உயர சுவரொன்றிருந்தது. சுவரின் மறுபக்கத்திலிருந்து உடுக்கையின் சப்தம் போல் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் சுவரிலிருந்த வாயிலருகே நெருங்க ஒரு வெள்ளையுடை அணிந்த பெண்ண நெருங்கி வந்து “சுவாமிஜி த்யானத்தில் இருக்கிறார். உள்ளே அனுமதி இல்லை.” என்று சிரித்தவாறு சொன்னாள். இவன் சற்று தயங்கிவிட்டு வந்த வழியிலேயே திரும்பி நடக்கத்துவங்கினான். கொஞ்ச தூரம் நடந்துவிட்டு அந்த சுவற்றின் திசையில் திரும்பிப் பார்க்க நான்கு பெண்கள் அந்த வாயிலின் வழியே உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். ‘தட் கய் ஹாஸ் எ குட் டேஸ்ட் பார் வுமன். எல்லாமே வொளப்சஸ் லேடீஸ்’ மீண்டும் அந்த வாக்கியம் நினைவிற்கு வந்தது. அந்த பெண்கள் எல்லோருமே சதைபிடிப்பாயிருந்தார்கள்.

ரவி ஒருமணிநேரம் அந்த ஆஷ்ரமத்தில் மேலும் கீழுமாய் நடந்து விட்டு பத்து ரூபாய் கொடுத்து கொஞ்சம் புளியோதரை வங்கிச் சாப்பிட்டு விட்டு கிளம்பினான். உடுக்கையின் சப்தம் இப்பொழுது பலமாய் கேட்டுக்கொண்டிருந்தது. தாளம் கொஞ்சம் பிசிரடிப்பதாய் பட்டது அவனுக்கு.


அடுத்தநாள் அலுவலகத்தில் மீண்டும் சாப்பாட்டுக் கடை விரிக்கப்பட்டது. ஒபாமா, ஒசாமா, மாஓயிஸ்ட் என்று பலதும் பேசித்தீர்த்து மீண்டும் சாமியார்கள் பக்கமாய் பேச்சு திரும்பியது.

“எல்லாருமே கம்மனாட்டிகள் தான். கொஞ்சம் பேர் மட்டிக்கரான். மத்தவங்க மாட்டிக்கல்லை. அதுதான் வித்யாசம்.” ராமநாதன் உரக்கச் சொல்ல இவன் அருகே அமர்ந்திருக்கும் வினோத் “அப்படி சொல்லறது சரியில்ல ராமநாதன் சார். நல்லவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா நாம ரொம்பவே நம்பியிருக்கரவங்க தப்பு பண்ணும்போது இப்படி ஒரு பொதுப்படையான அபிப்ராயம் வந்திருது.” என்று விட்டு இவன் பக்கம் திரும்பி “ஸ்ரீ ஸ்ரீ சக்ரகலாதரர் பத்தி கேள்விப்படிருக்கிங்களா?” என்றான்.

ரவி உள்ளே திடுகிட்டலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் “இல்லை” என்பது போல் தலையசைத்தான்.

“ஒரு வாரம் முன்ன அவரோட ஆஷ்ரமம் சம்பந்தப்பட்ட சிடி ஒண்ணு எடிட்டோரியலுக்கு வந்துச்சு. ஆஷ்ரமத்தோட முன்ன தொடர்பிலயிருந்த ஒரு நபர் ஸ்பை காம் வச்சு எடுத்த சமாசாரம். ஸ்ரீ ஸ்ரீ யோட சீடராயிருந்த அவர் தனக்கு தீட்சை அளித்து ப்ரதம சீடராக்கல்லை அப்படிங்கற கடுப்புல ஸ்ரீ ஸ்ரீ பக்தர்களோட தனிமைல பேசற அறைல காமராவ வச்சிட்டார்.”

ரவியின் இருதயத்துடிப்பு அதிகரித்தது. வினோத் ஒரு சிறு இடைவேளை விட்டு சப்பாத்தியை மாடு அசை போடுவது போல் மெதுவாக மென்று விழுங்தி தண்ணீர் குடித்துவிட்டு தொடர்ந்தான்.

“மூன்று நாட்களோட அன் ஏடிடட் ஃபுடேஜ் இருந்தது அந்த சிடில. ஏறக்குறைய ஐம்பது பேரை தனிமைல சந்திக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ. அதுல நிறைய பெண்கள். ஒரு இடத்துல கூட ஒரு தப்பான பார்வையோ தப்பான பேச்சோ இல்லை. பேசற விஷயங்களெல்மே ஆன்மீக முத்துக்கள். தொகுத்து புஸ்தகமா போடலாம். இரண்டாவது நாள் சாயந்தரம் ஸ்ரீ ஸ்ரீ யோட ப்ரதம சீடர் ஒருவர் அந்த அறையில் ஒரு பெண்மணியை சந்திகிறார். அவங்க கொஞ்சம் சில்மிஷத்துல ஈடுபடறாங்க. ஆசிரியருக்கு ஸ்ரீ ஸ்ரீ மேல நல்ல மதிப்பு. கூப்பிட்டு விஷயம் சொல்ல ஸ்ரீ ஸ்ரீ சம்பந்தப்பட்ட நபர ஆஷ்ரமத்தை விட்டு நீக்கிடரார். பத்திரிகையும் விஷயத்தை பெரிசுபடுத்தலை. அதனால தான் சொன்னேன். எல்லருமே கம்மனாட்டிநு பொதுப்படையா சொல்றது சரியில்லை. ஸ்ரீ ஸ்ரீ போல நல்லவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க.” சொல்லிவிட்டு அவன் சப்பாத்தியை அசை போடுவதை தொடர்ந்தான்.

சாப்பிட்டு திரும்பும் வழியில் “இது தான் அந்த சிடி. போட்டுப் பாருங்க. ஸ்ரீ ஸ்ரீ பேசற ஒவ்வொரு விஷயமும் அத்தனை ஆழமானது. கான்பிடென்ஷியலா வச்சுக்குங்க.” என்று விட்டு ஒரு சிடி யை தந்தான். ரவி அதை வாங்கிக்கொண்டு தன் மேஜைக்கு வந்தான்.


ஆறரை மணிக்கெல்லாம் வீடு திரும்ப சத்யப்ரேமா இருக்கவில்லை. உடை மாற்றி முகம் கழுவிவிட்டு முதல் வேலையாய் வினோத் தந்த சிடி யை ப்ளேயரில்ப் போட்டு தொலைகாட்சியை உயிர்ப்பித்தான். நிறைய நேரத்திற்கு ஆள் இல்லாத ஒரு அறையை ஒரே கோணத்திலிருந்து கட்டிகொண்டிருக்கிறது கேமரா. ஸ்ரீ ஸ்ரீ அறைக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒருவர் பின் ஒருவராய் பக்தர்கள் வந்து போகிறார்கள். எல்லோரும் தங்களது ப்ரச்சனைகளை சொல்லி அழ ஸ்ரீ ஸ்ரீ பொறுமையாய் கேட்டுவிட்டு கருணை நிறைந்த குரலில் ஆறுதல் சொல்கிறார். வேதம், உபநிஷத் என்று சரளமாய் மேற்கோள் காட்டி பேசுகிறார். மனதை லேசாகும்படியான பேச்சு. சிலருக்கு தியானம் கற்றுத்தருகிறார். இடையிடையே மிக மிக மெதுவாக கட்சிகள் நகர்கின்றன.

இரண்டாம் நாள் மாலை. அறையில் ஆளில்லை. நீண்ட நேரத்திற்குப் பின் அறைக்குள் ஒரு நபர் காவியுடையில் நுழைகிறார். தொடர்ந்து ஒரு பெண்ணும் நுழைகிறாள். பெண்ணின் முகம் மாஸ்க் செய்யப்பட்டிருக்கிறது. இருவரும் அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் ஆறத்தழுவிக்கொள்கிறார்கள். தழுவியபடியே நகர்ந்து கேமராவின் வட்டத்திற்கு வெளியே போகிறார்கள். ரவி அந்த கட்சியைத் திருப்பிப்போட்டுப் பார்கிறான். வெளிர் நீல சேலையில், அவனுக்கு மிக மிக பரிச்சயமான உடல்வாகில் இருக்கும் அந்த பெண் சத்யப்ரேமா.

Friday, April 9, 2010

அப்பண்ணாவின் எறும்புகள்




அப்பண்ணாவின் பதினாறாவது வயதில் அவன் தந்தை அவனுக்கு ஒரு இரும்பினாலான பெட்டியை கொடுத்தார். மூன்று நான்கு முறை வர்ணம் தீட்டப்பட்டிருந்ததால் அது ஒரு கலவையான நிறத்தில் இருந்தது. அப்பண்ணா முதன்முதலாய் அந்த பெட்டியை திறந்து பார்த்தபொழுது அதற்குள் நிறைய எறும்புகள் இருந்தன. அவை குறுக்கும் நெடுக்குமாய் அந்த பெட்டியே உலகமென்று வலம்வந்துகொண்டிருந்ததை பார்க்க வேடிக்கையாயிருந்தது. அப்பண்ணா அந்த எறும்புகளை வெளியேற்றாமல் பெட்டியை மூடினான்.

நாளடைவில் அப்பண்ணாவிற்கு தன் வாழ்க்கையில் அவன் பொக்கிஷமாய் கருதிய எல்லாவற்றையும் அந்த பெட்டியில் போட்டு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. பெட்டியிலிருந்த எறும்புகள் எந்தவொரு பொருளையும் ஒருபோதும் நாசம் செய்ததில்லை. அவற்றிற்கு அந்த பொருட்கள் அப்பண்ணாவிற்கு எத்தனை உயர்வானவை என்று தெரிந்திருந்தது போல் நடந்துகொண்டன.

மனம் பாரமாயிருக்கும்பொழுது அப்பண்ணா பெட்டியை திறந்து வைத்து அந்த எறும்புகளை பார்த்துக்கொண்டிருப்பான். சில எறும்புகள் இவன் பெட்டி திறந்ததும் ஒளிந்துகொள்ளும். மற்றவை ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேர்க்கோட்டில் சரசரவென்று ஏதோ அவசர வேலையாய் போவது போல் ஊர்ந்து போய்க்கொண்டிருக்கும். அதை பார்த்திருக்கும் அப்பண்ணாவின் மனம் லேசாகும். காகிதத் துணுக்கையோ மாரத்துண்டையோ மற்ற எதையோ சுமந்து நடந்து போய்கொண்டிருக்கும் சில எறும்புகள்.

அவனுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும் பொழுது அவன் அந்த பெட்டிக்குள் கொஞ்சம் சர்க்கரை போடுவான். சர்க்கரை பெட்டிக்குள் விழுந்த சிரிது நேரத்திற்க்கெல்லாம் எறும்புகள் கூட்டமாய் கூடிவிடும். வழக்கமாய் இவன் பெட்டி திறக்கும் பொழுது ஒளிந்துகொள்ளும் எறும்புகள் கூட அவசரமாய் வெளியே வந்து சர்க்கரையை மொய்க்கும். அப்பண்ணா அவற்றை மகிழ்ச்சியாய் பார்த்திருப்பான்.

அப்பண்ணாவிற்கு திருமணமான பிறகும் ஏறும்புகளுடனான அந்த நெருக்கம் நீடித்தது. அவன் மனைவிக்கு அவன் வாரத்தில் ஒருமுறை அந்த இரும்புப்பெட்டியை திறந்து வைத்து வெறித்துப்பார்ப்பதும் உரக்கச் சிரிப்பதும் வினோதமாய் பட்டது. அவள் ஒருமுறை அப்பண்ணா வீட்டில் இல்லாதபோது அந்த பெட்டியை திறந்து அதில் என்ன இருக்கிறதென்று பார்க்க முயற்சித்தபொழுது அதில் மொய்த்திருந்த எறும்புகள் அவள் விரல்களை கடித்தன. அவள் படாறென பெட்டியைச் சாத்திவிட்டு கையை உதறியபடி ஓடினாள். அதற்குப்பின் அவள் அந்தப் பெட்டியை திறக்க முயற்சிக்கவேயில்லை. அவர்களது நாற்ப்பது வருட திருமண வாழ்வில் அவளால் அப்பண்ணாவிற்கும் அந்த எறும்புகளுக்குமிடையேயிருந்த நெருக்கத்தை புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரிந்து கொள்ளாமலே அவள் இறந்துபோனாள்.

அப்பண்ணாவிற்கு மூன்று மகன்கள். எல்லோரும் வளர்ந்து அவரவர் வழியில் போய்விட்டார்கள். மனைவி இறந்த பின் அப்பண்ணா தனிமையில் வாடினான். உடம்பிற்கு வந்து பார்த்துக்கொள்ள ஆளில்லாமல் இறந்துவிடுவோமோ என்ற பயம் மனதை ஆட்கொண்டது. மகன்கள் மாதமொருமுறை வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். அந்தப் போக்குவரத்தும்கூட அப்பண்ணாவின் பெயரிலிருந்த வீட்டிற்காகவும் கொஞ்சம் நிலத்திற்காகவும் தான் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தது. இரண்டு மூன்று முறை மகன்கள் சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதித்தருமாறு சூசகமாய் கேட்டார்கள். அப்பண்ணாவிற்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. அப்படிச் செய்தால் மகன்களில் போக்குவரத்து முழுவதுமாய் நின்றுவிடும் என்பதை அவன் அறிந்திருந்தான். தான் தனித்துவிடப்பட்டிருபதாகவும் சொத்துக்கள் முழுவதையும் தானமாய் கொடுக்கப்போவதாகவும் சொன்னான். சொத்திற்காகவாவது மகன்கள் பாசமாயிருக்க மாட்டார்களா என்று ஏங்கினான்.

இரகசியமாய் சொத்துக்கள் எல்லாவற்றையும் சமமாய் மூன்று மகன்களில் பெயரிலுமாக்கி உயில் ஒன்றை எழுதினான் அப்பண்ணா. அதை அவனது இரும்புப்பெட்டிக்குள் அவனது மற்ற பல பொக்கிஷங்களுடன் போட்டு வைத்தான். எறும்புகள் அதை சுற்றிச் சுற்றி வந்தன. அவன் கைகளை பெட்டிக்குள் போட எறும்புகள் அவன் விரல்களில் குருகுருப்பாய் ஊர்ந்தன. அவை அவனை வருடிக்கொடுப்பது போலவும் ஆறுதல் சொல்வது போலவும் இருந்தது அப்பண்ணாவிற்கு. கொஞ்சம் சர்க்கரை எடுத்துப் பெட்டிக்குள் போட எறும்புகள் எல்லாம் கூட்டமாய் அதை மொய்த்தன.

அப்பண்ணாவிற்கு எண்பத்திரண்டு வயதாகியும் அவன் இழுத்துக்கொண்டு கிடக்க மகன்கள் எரிச்சலானார்கள். சொத்தும் தராமல் செத்தும் தொலையாமல் கிழம் இழுத்துக்கொண்டு கிடக்கிறதே என்று கடுப்பானார்கள். அவன் செவிபடவே முணுமுணுத்தார்கள். மீண்டுமொருமுறை சொத்து பற்றி கேட்க அப்பண்ணா முடியாது என்று சொல்ல “செத்துப்போ கிழமே.” என்று கத்தினார்கள்.

அன்று இரவு அப்பண்ணா பெட்டி திறந்து அதற்குள் கைவிட்டபடி செத்துப்போனான்.

கொஞ்சம் நாட்களுக்குப் பின் மகன்கள் அப்பண்ணாவின் பெட்டி படுக்கைகளை எல்லாம் துழாவினார்கள். கடைசியாய் அவனது இரும்புப் பெட்டியை திறந்தார்கள். அதிலிருந்து அப்பண்ணா திருமணத்தன்று அணிந்திருந்த பட்டு வேஷ்டி அவன் அப்பா அம்மாவின் புகைப்படம் அவன் மனைவியின் தாலி இப்படி ஒவ்வொன்றாய் கிளறி எடுத்தார்கள். பெட்டிக்குள் இருந்த அத்தனை பொருட்களும் எந்த சேதமும் இல்லாமல் இருந்தன. அப்பண்ணா மகன்களின் பெயரில் எழுதிவைத்திருந்த உயிலை மட்டும் எறும்புகள் சுத்தமாய் கடித்து நாசம் செய்திருந்தன. பெட்டிக்குள் கொஞ்சம் சர்க்கரை கிடந்தது. இருந்தும் ஒரு எறும்பு கூட தட்டுப்படவில்லை.

Wednesday, April 7, 2010

பூஞ்சோலை என்றொரு கிராமம்




இரயில் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டிருந்ததை உணர்ந்து நான் என் பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்குவதற்கு ஆயத்தமானேன். நேரம் அதிகாலை நான்கு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது.

கதவருகே நின்றுகொள்ள காற்று முகத்தில் அறைந்தது. தொலைவில் வெளிச்சப் புள்ளிகளாய் வீடுகளும் தொழிற்சாலைகளும் கடந்து சென்றன. விரைவு வண்டி ஒன்றிற்கு வழிகொடுத்துவிட்டு இரயில் மீண்டும் வேகம் பிடித்தது. பத்து நிமிட பயணத்திற்கு பிறகு நிறுத்தத்திற்கு வர நான் இறங்கிக்கொண்டேன். தரையில் கால்பதித்த மாத்திரத்தில் மனதில் ஒரு சந்தோஷ அலை அடித்து ஓய்ந்தது.

அந்த அதிகாலை நேரத்தில் இரயில் நிலையம் வெறிச்சோடியிருந்தது. விளக்குக்கம்பத்தின் அடியில் தெருநாய் ஒன்று சுருண்டு படுத்திருந்தது.

இன்னும் மூன்று மணிநேர பயணத்தில் ஒரு மோகம் நிறைவேறப்போகிறது. பல வருடங்களாய் மனம் கொண்டிருக்கும் தாகம் இன்று தணியப்போகிறது. போர்ட்டர் ஒருவன் நெருங்கிவந்தான்.

“எங்க சார் போகணும்?”

“பூஞ்சோலை.”

“முதல் பேருந்து கிளம்பிக்கிட்டிருக்கும். வாங்க புடிச்சிடலாம்.” என்று கூறி பெட்டிகளை வாங்கிக்கொண்டான்.

முதலிலெல்லாம் பூஞ்சோலைக்கு பேருந்து வசதி கிடையாது. நடந்து தான் கிராமம் வரை செல்ல வேண்டும். சற்று வசதி படைத்தவர்கள் மாட்டு வண்டியில் பயணப்படுவார்கள். கிராமம் வரை நடந்து செல்வதே ஒரு சுகமான அனுபவம். குறுகிய பாதையின் இருமருங்கிலும் அடர்த்தியாய் மரங்கள். உடலை உரிமையோடுத் தொட்டுச்செல்லும் குளிர்காற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை. எங்கும் ஒரு சுகமான அமைதி.

சின்ன வயதில் அந்த பாதையில் நிறைய நடந்திருக்கிறேன். கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு அண்ணனின் தோளில் ஏறி அமர்ந்துகொள்வேன். வழியோர மாமரத்திலிருந்து காய் பறித்து ஒரு கடி கடித்து தூர வீசிவிடுவேன். சுமைகள் இல்லாத சுகமான காலம்.

போர்ட்டரின் பின்னால் நடந்து வந்து ஒரு பேருந்தில் எறியிருந்ததை உணர்ந்து அவனுக்கு பணம் கொடுத்து அனுப்பினேன். கண்டக்டரிடம் பூஞ்சோலை கேட்க “கிராமத்துக்குள்ள போகாது சார். ஒரு ஒண்ணரை கிலோமீட்டர் நடக்கணும்.” என்றுவிட்டு சீட்டை கிழித்துத்தந்தான். நவீன தொழில்நுட்பங்கள் இன்னும் கிராமத்தை ஊடுறுவவில்லை. ஒரு ஒன்றரை கிலோமீட்டர் தள்ளியே நிற்கின்றன. சிரித்துக்கொண்டேன்.

முப்பது வருடங்களாயிற்று நான் பிறந்த இந்த மண்ணைப்பார்த்து. இந்த இடைவெளியில் மனதில் ஒட்டாத மேம்போக்கான ஒரு வாழ்க்கை. இப்பொழுது அந்த கிராமத்து நினைவுகளை அசைபோடும்பொழுது மனம் லேசாகிறது. வாழ்க்கை என் காலடியில் இருப்பதை உணராது ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் சென்று தேடிக்கொண்டிருந்திருக்கிறேன். பல வருடங்களாயிற்று ‘கிராமம் வரை ஒரு எட்டு போய் பார்க்கவேண்டும்’ என்று நினைக்கத்துவங்கி. எல்லா வருடமும் கடைசி நேரத்தில் தட்டிப்போய்விடும். இந்த முறை எந்த சிக்கலுமில்லாமல் இத்தனை தூரம் வந்தாயிற்று. என் நினைவுகளின் கோர்வையை முகத்தில் ‘சுரீர்’ என்று அறைந்த காற்று கலைத்தது. பேருந்து புறப்பட்டிருந்தது.


தொடரும்.....

Monday, April 5, 2010

அவன், அவள், இன்னொருவன்.





பாலா கையில் ஒரு பளபளப்பான கத்தி வைத்திருந்தான். சமையலறையில் முதுகு காட்டி நின்றிருந்த ப்ரியாவை மெல்ல நெருங்கினான். கண்களில் நீர் கோர்த்திருந்தது.

பாலாவினுடையது ஒரு காதல் திருமணம். ப்ரியா ஒரு பேரழகி. ஐந்தடி ஐந்தங்குலத்தில் வெண்ணையில் செதுக்கியெடுத்த சிற்பம் போலிருப்பாள்.

மூன்று வருடங்களுக்கு முன் ஒரு ஆகஸ்ட் மாதத்தில் பாலாவின் ஓவியக் கண்காட்சி ப்ரியா வரவேற்பாளினியாய் பணிபுரியும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. பாலாவே முன்னால் நின்று ஏற்பாடுகளனைத்தும் செய்ததில் அடிக்கடி ப்ரியாவை சந்தித்துப் பேச நேர்ந்தது. ஏற்பர்டுகளுக்காய் முப்பது தினங்களும் கண்காட்சிக்காய் பதினைந்து தினங்களுமாக தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்கள் அவர்கள் சந்தித்ததில் ப்ரியவிற்கு அவனை பிடித்துப்போனது.

அவளுக்கு அவன் ஓவியங்கள் எதுவும் புரியவில்லை. கழுதையா குதிரையா என்று நிறைய நேரம் உற்றுப்பார்த்தும் விளங்கவில்லை. சில படங்கள் அவன் தூங்கும்பொழுது தவறுதலாய் கை தட்டி சாயம் காகிதத்தில் விழுந்ததுபோலிருந்தது. பாலா ஒவ்வொரு ஓவியம குறித்தும் ஒரு மணிநேரம் விளக்கிச் சொன்னான். அவன் விளக்கங்கள் ஓவியங்களை விட குழப்பமாயிருந்தன.

பாலா அவளை விட உயரம் கம்மி. கலைந்த தலையும் சீர்திருத்தாத தாடியுமாய் தடித்த கண்ணாடியிலிருப்பான். ப்ரியாவை அவன்பால் எது ஈர்த்தது என்று இருவருக்கும் பிடிபடவில்லை. இருந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். ஆந்திராவில் ரௌடியாயிருக்கும் அப்பா திருமணமாகாத தங்கை ஜாதகம் பார்த்து குறை சொல்லும் பெரியப்பா என்று எந்த சினிமா சிக்கலும் இல்லாததால் அவர்கள் சந்தித்து ஆறு மதங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

பாலாவிற்கு ஓவியங்களிலிருது குறைவான வருமானமே வந்ததால் ப்ரியா தொடர்ந்து வேலை செய்ய நேர்ந்தது. அத்திபூத்ததுபோல வந்த ஓரிரு வாய்ப்புகளில் சொற்பமான பணமே கிடைத்தது. தன் கலைத்திறனுக்கு ஒரு வடிகால் கிடைக்காததும் ப்ரியாவின் வருமானத்தில் வாழ்வதும் பாலாவின் தன்னம்பிக்கையை குலைத்தது. அது நிலைமையை மேலும் பழாக்கியது.

எங்கெங்கோ அலைந்து திரிந்தும் பயனேதும் இல்லாமல் அன்று மதியம் வீடு திரும்பியபொழுது வாசலில் ஒரு கார் நிற்பது பார்த்து தயங்கிச் நிற்க ப்ரியவும் இன்னொருவனும் வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அவசரமாய் புறப்பட்டார்கள். பாலாவிற்கு வியர்த்தது

யார் அவன்? ப்ரியா எதற்கு இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்தாள்? எதற்கு அவனை வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள்? ஏன் அவசரமாய் கிளம்பினார்கள்? கேள்விகள் மனதை அரித்தன. அவன் தன் குழப்பத்தை ஒரு காகிதத்தில் இறக்கினான். மஞ்சளும், சிவப்பும், கருப்புமாய் ஒரு ஓவியம வரைந்தான். நீண்ட நேரம் அதையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். மாலையில் அவள் வீடு திரும்பினாள். காலையில் வைத்திருந்த பொட்டு இப்பொழுது இல்லை. சேலை கொஞ்சம் கசங்கியிருந்தது. அவள் வழக்கமான நலவிசாரிப்புகளுக்குபின் சமையலறையில் நுழைந்தாள்.

இருவரும் அதிகம் பேசாமல் சாப்பிட்டு முடித்து படுக்கைக்கு வந்தார்கள். அவள் தலை வலிக்கிறது என்றுவிட்டு சீக்கிரமே தூங்கிப்போனாள். பாலாவிற்கு தூக்கம் வரவில்லை. சந்தேகம் மனதை அரித்துச்சுவைதது. தன்னை விட அழகான ஒரு பெண்ணை திருமணம் செய்தது தவறோ? மதியம் அவளுடன் பார்த்தவன் எப்படி இருந்தான்? நல்ல நிறம் போலிருந்தது. அவளை விட உயரம். உயர்ரக கார் அது. உடன் பணிபுரிபவனா? இல்லை வேறு ஏதேனும் வழியில் பழக்கமா?. எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காமல் பாலா உறங்கிப்போனபொழுது நேரம் அதிகாலை மூன்று மணி.

பதினோரு மணிக்கு பாலா எழுந்தபொழுது அவள் வேலைக்குப் போயிருந்தாள். சாப்பாட்டு மேஜையில் அவனுக்கான உணவும் காகிதத்தில் சில குறிப்புகளும் எழுதி வைத்திருந்தாள்.

அவன் மேலும் ஒரு ஓவியம வரைய துவங்கி பாதியில் கிழித்துப்போட்டான். மாலை நான்கு மணிக்கு அவள் பணிபுரியும் ஹோட்டலுக்கு போனான். ரிஸெப்ஷனில் அவள் இல்லை.

“பர்சனல் வேலையா வெளிய போயிருக்காங்க.”

“எப்ப போனாங்க?”

“இரண்டு மணிநேரம் இருக்கும்.”

அவன் திரும்பி வீடு வந்தான். சந்தேகம் இப்பொழுது ஆத்திரமாய் மாறியிருந்தது

மாலை ஏழு மணிக்கு அவள் வீடு திரும்பினாள். இன்றும் சேலை கசங்கியிருந்தது.

கைப்பையை தூர வீசிவிட்டு அவனை வந்து அணைத்துக்கொண்டாள்.

“ஒரு குட் நியூஸ் பாலா.” என்றள்.

“நேஷனல் ஆர்ட் காலரில மாடர்ன் ஆர்ட் பெய்ன்டிங் எக்ஸிபிஷன் ஒண்ணு போடப்போறாங்க. இது உங்களுக்கான அழைப்பு.” என்று விட்டு அவனிடம் ஒரு காகிதத்தை தந்தாள். “காலரி க்யுரேட்டரை நேத்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உங்க பெய்ன்டிங்ஸை காட்டினேன். அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இன்னைக்கு வந்து இன்விடேஷன் வாங்கிக்கச் சொன்னார்.” சொல்லிவிட்டு அவள் உடை மாற்றி சமையல் அறையில் நுழைந்தாள்.

பாலா கையில் ஒரு பளபளப்பான கத்தி வைத்திருந்தான். சமையலறையில் முதுகு காட்டி நின்றிருந்த ப்ரியாவை மெல்ல நெருங்கினான். கண்களில் நீர் கோர்த்திருந்தது. அவள் வெங்காயம் அரிந்து கொண்டிருந்தாள். அவள் அருகே நெருங்கி “நான் நறுக்கித்தரட்டுமா ப்ரியா?” என்றான்.

Thursday, April 1, 2010

பின் ஒரு மழை நாளில்




பதின்மூன்றாம் நாள் காரியமெல்லாம் முடித்து சாஸ்திர சம்ப்ரதாய வழக்கங்களின் ப்ரகாரம் கல்பனாவை வழியனுப்பி வைத்தாகிவிட்டது. அக்னி ஜ்வலைகள் அவளின் உடலை தம்மோடு ஐக்கியமாக்கிக்கொண்டுவிட்டன. ஒப்பற்ற அந்த சங்கமத்தின் சாட்சிய சந்ததிகளாய் எலும்பு மிச்சங்கள். நதியின் ப்ரவாகத்தில் கரைக்கும் பொருட்டு சாம்பலாய் மண்பானையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் கல்பனா. மண்ணில் புதைக்கும் முன் நடுங்கும் விரல்களால் அந்த பானையின் உடலை தொட்டுப்பார்த்தான் ப்ரகாஷ். உடல் சிலிர்த்தது. கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள மெதுவாய் அவள் பெயரை உச்சரித்தான். உடலும் மனமும் சோர்ந்திருந்தன.

சிதையில் கிடத்தப்பட்டிருந்த அவன் மனைவி. மனதில் கல்வெட்டாய் பதிந்துபோயிருந்த கடைசியாய் அவன் பார்த்த அவளது உருவம். அவளது முகம் மூடப்பட்ட கடைசி விநாடி வரை இமைகொட்டாமல் அவளை மனதில் வாங்கிக்கொண்டான்.

அத்தனையும் முன்னரே திட்டமிட்டு வைக்கப்பட்ட விஷயம் போல் நடந்து முடிந்துவிட்டன. இந்த பதின்மூன்று நாட்களும் ஒரு இயந்திரம்போல் இயங்கினான் ப்ரகாஷ். தன்வசமில்லாத எதுவோ ஒரு சக்தி அவனை செலுத்துவதாய்பட்டது. இடையிடையே இவையாவும ஒரு கனவாய் இருக்கக்கூடாதா என்ற எண்ணம எழுந்தது. நடு இரவில் அதிர்ந்து எழுந்து கண்டவை யாவும் கனவு என்று உணரும் அந்த முதல் வினாடிக்காய் காத்திருப்பது போல் பட்டது. நிமிடங்களும் நாட்களும் கடந்து செல்ல பதின்மூன்று நாட்களாகியும் அந்த விநாடி வரவில்லை.

அவன் கேட்ட நேரத்தில் கிடைக்காத தனிமை இப்பொழுது அவனை சூழ்ந்திருக்கிறது. அவள் சடலத்தை கட்டிக்கொண்டு அழநினைத்த போதும் அவள் விரல்களை பற்றி கண்களில் ஒற்றிக்கொள்ள நினைத்தபோதும் அவள் பெயரை கத்தி மார்பில் அறைந்துகொண்டு கதற நினைத்தபோதும் கிடைக்காத தனிமை இப்பொழுது இம்சையாய் தலை கனக்க வைக்கிறது.

“கல்பனா.” என்று மெதுவாக கூப்பிட்டுப்பார்க்கிறான் அவள் அருகில் எங்கோ இருபது போன்ற உணர்வில். பதில் இல்லை.

“எங்கே போய்விட்டாய் கல்பனா? நீ பக்கத்தில் எங்கோதான் இருப்பதுபோல் இருக்கிறது. உன்னால் என்னை பார்க்கமுடிகிறதா? அவன் விட்டத்தைப்பார்த்துக் கேட்கிறான். பதில் இல்லை.

அயர்ச்சியில் படுகையில் படுத்து அவள் சேலையொன்றை உடலில் போர்த்திக்கொள்கிறான். அவன் மனதில் அவர்கள் முதன்முதலாய் சந்தித்த தினம் விரிகிறது.





ஒரு புதன்கிழமையின் மாலை. வெளியே மழை வரும் போலிருந்தது. வானில் யாரோ பாதி வரைந்து புறக்கணித்துப்போன ஓவியங்களாய் மேகக்கூட்டங்கள். அந்த பத்துக்குப்பத்து அறையில் இடப்பட்டிருந்த சோபாவில் ப்ரகாஷ் அமர்ந்திருந்தான். அருகே அம்மா. எதிரே சுப்ரா மாமா. ப்ரகாஷிற்கு முன்தினம் இரவு படுக்கையில் படுத்து செய்த ஒத்திகையெல்லாம் பயன்தராமல் பரபரப்பாய் உணர்ந்தான். மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியையும் மீறி அரும்பிய வியர்வை துளிகளை கைகுட்டையால் துடைத்துக்கொண்டான். அவன் பரபரப்பை கவனித்த சுப்ரா மாமா “பொண்ணை கூப்பிடலாமே.” என்றார் அருகே அமர்ந்திருந்த வரதராஜனை பார்த்து.

“சரோஜா. கல்பனாவை அழைச்சிட்டு வா.” வரதராஜன் பக்கத்துக்கு அறையை பார்த்துக் குரல் கொடுத்தார்.

“தோ.” என்று பதில் குரல் வந்தது அறையிலிருந்து.

“அது பாருங்கோ. பொம்மனாட்டிகளுக்கே அலங்காரம் பண்ணிக்கணும்னா நாழியாகும். அதுவும் இது மாதிரி ஒரு மங்களகார்யம்னா கேக்கணுமா?” வரதராஜன் வாய்மொழிய “வாஸ்தவம். வாஸ்தவம்.” என்றுவிட்டு சுப்ரா மாமா பலமாய் சிரித்தார்.

ப்ரகாஷ் குரல் வந்த அறை நோக்கிப் பார்வையை திருப்புகிறான். சிவப்பு வர்ணத் திரைச்சீலை இடப்பட்டிருகிறது அந்த அறையில். அறைக்குள்ளிருந்து மல்லிகைப்பூவின் வசம் புறப்பட்டு வந்து அவன் நாசியை தீண்டுகிறது. வளையல்களின் சிணுங்கல் சப்தம் கேட்கிறது. தொடர்ந்து பட்டுச்சேலை சரசரக்கும் சப்தம். திரைச்சீலை விலக்கப்படுவதை உணர்ந்து ப்ரகாஷ் பார்வையை தாழ்த்திக்கொள்கிறான். அவள் அறையில் நுழைந்திருக்க வேண்டும். அறை முழுவதும் மல்லிகைப்பூவின் மணம்.

“பெரியவங்களை நமஸ்காரம் பண்ணிக்கோமா.” பெண் குரல்.

அவள் வளையல்கள் சப்திக்க விழுந்து வணங்குகிறாள் ப்ரகாஷ் விழிகளை உயர்த்திப்பார்க்க அவள் சடைப்பின்னலும் அதில் சூடியிருந்த மல்லிகைச்சரமும் தான் அவன் பார்வையில் முதலில் விழுந்தன. மஞ்சள் வர்ண பட்டுச் சேலை கட்டியிருந்தாள்.

அவள் எழுந்து கொள்ள ஒரு விநாடி அவள் முகம் பார்த்துப் பின் உள்ளங்கையை பார்த்துக்கொண்டான் ப்ரகாஷ். புகைப்படத்தை விட நேரில் சற்று நிறம் கூடுதலாய் தெரிந்தாள்.

“என்னம்மா படிச்சிருக்கே?” அருகில் அமர்ந்திருந்த அம்மா கேட்க “பி.ஏ..” என்றாள் அவள். ப்ரகாஷ் மீண்டுமொருமுறை அவள் நின்றிருந்த திசையில் பார்வை போட அவள் புன்னகைத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

“எல்லாருக்கும் காப்பி கொடுமா.” என்றுவிட்டு தாய் அவளிடம் தட்டை கொடுக்க அவ்ள் அனைவருக்கும் தந்துவிட்டு கடைசியாய் ப்ரகாஷிடம் வந்தாள். தட்டிலிருந்த கடைசி டம்ளரை எடுத்து அவனிடம் கொடுக்க அவன் வாங்கிக்கொண்டபொழுது அவள் விரலை மெலிதாய் தொட நேர்ந்தது. அவன் நிமிர்ந்து பார்க்க அவள் முகத்தில் வெட்கப்பூ பூத்திருப்பது தெரிந்தது.

“நீயும் உட்கார்ந்துக்கோமா.” என்று ப்ரகாஷின் அம்மா சொல்ல அவள் ப்ரகாஷின் எதிரே நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

“பாட்டு கத்துண்டிருக்கியாமா?”

“உம்” என்றாள் அவள்.

“ஒரு பாட்டு பாடேன்.”

அவள் தாயை பார்க்க தாய் ‘பாடு’ என்பது போல் தலையசைக்க சாமஜவரகமானா பாடினாள். ப்ரகாஷ் சின்னச் சின்ன இடைவெளிகளில் அவள் மேல் பார்வை போட்டான். தாளம் போடும் அவள் கையை கவனித்தான். பாதங்களை கவனித்தான். உதடுகளை கவனித்தான். அரை நிமிடம் கனவில் மூழ்கி மீண்டு வந்தபொழுது அவள் பாட்டை முடித்துக்கொண்டிருந்தாள்.

தொடர்ந்து ப்ரகாஷும் கல்பனாவும் தனித்து விடப்பட்டார்கள். துண்டு துண்டாயில்லாமல் இப்போது அவளை முழுவதுமாய் பார்க்க முடிந்தது. இமை கொட்டாமல் அவளை பர்ர்த்துக்கொண்டிருந்தான் ப்ரகாஷ். அவள் படிப்பு பற்றி கேட்டான். அவன் படிப்பு பற்றி சொன்னான். வானிலை பற்றி பேசினான். அவள் அப்பாவின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் உள்ள தூரத்தை கேட்டு தெரிந்து கொண்டான். பேசுவதற்கு விஷயம் எதுவும் கிடைக்காமல் போக அவள் அப்பா அலுவலகத்திற்கு என்ன வாகனத்தில் பயணிப்பார் என்ற அதிமுக்கியமான விஷயத்திற்கும் பதில் கேட்டு பெற்றுக்கொண்டான். தொடர்ந்து அந்த வாகனத்தின் மற்ற விபரங்களை கேட்கும்முன் வாயிலருகே சுப்ரா மாமாவின் செருமல் சப்தம் கேட்டது.

அவன் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வரும்முன் “உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றான். அவள் முகத்தில் இரண்டாவது முறையாய் ஒரு வெட்கப்பூ மொட்டுவிட்டு உடனே மலர்ந்தது. வெளியே மழை பெய்ய தொடங்கியிருந்தது





ப்ரகாஷின் கண்ணீர் அவன் முகத்தில் போர்த்தியிருந்த அவள் சேலையை நனைத்தது. அந்த புதன்கிழமையின் மாலையில் மஞ்சள் வர்ணப்பட்டுச்சேலையில் பார்த்த கல்பனாவின் நினைவு மீண்டும் மீண்டும் மனதில் வந்து மனதை பாரமக்கியது. இடையிடையே அவன் எத்தனை முயற்சித்தும் தடுக்க இயலாமல் சிதையில் கிடத்தப்பட்டிருந்த அவளது உருவமும் நினைவில் வந்தது.

வாக்கியம் முடிவுபெரும் முன்னரே வைத்த முற்றுப்புள்ளி போல வாழ்ந்து முடிக்கும் முன்னரே வந்த அவள் மரணம் அவனை புரட்டி போட்டது. வாழ்கையை குறித்தும் மரணத்தை குறித்தும் மனதில் எழுந்த கேள்விகள் தலையை கனக்கச்செய்தன. கல்பனா என்பது பதின்மூன்று நாட்களுக்கு முன் விறகில் கிடத்தி எரித்த அந்த உடல் மட்டும் தானா? மண்ணில் புதைத்து வைத்திருக்கும் அவள் சாம்பலையும் ஆற்றில கரைத்தால் கல்பனா முழுவதுமாய் அழிந்துபோவளா? அவள் கனவுகளையும் இரசனைகளையும் எண்ணங்களையும் தீயில் சுட்டு காற்றோடும் நீரோடுமாய் கரைத்துவிட முடியுமா?

கண்கள் பாரமாகி தலை சுற்றுவது போலிருந்தது. பசித்தது இருந்தும் சாப்பிட தோன்றவில்லை. நிறைய நேரம் விட்டத்தை பார்த்து படுதிருந்தவன் மாலை நேரத்தில் உறங்கிப்போனான்.





“பாலகுமாரனோட எழுத்து பிடிக்கும். ராத்திரி நேரத்துல கர்நாடக சங்கீதம் கேக்க பிடிக்கும். கால் வலிக்கிரவரைக்கும் நடக்கப் பிடிக்கும். இப்படி நிறைய. உனக்கு என்ன பிடிக்கும்?” அவனுக்கு பிடித்தவற்றை சொல்லிவிட்டு ப்ரகாஷ் அவளை அவர்கள் முதலிரவில் கேட்டான்.

“மழை பிடிக்கும்.” என்றாள் அவள்.

“மழையா?”

“ஆமாம். மழை ரொம்ப பிடிக்கும்.”

அவள் மழை குறித்து வர்ணிக்க ப்ரகாஷ் லயித்துப்போய் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு கதை பேசிக்கொண்டிருந்தாள். தொடர்ந்து வந்த நாட்களில் அவள் ப்ரகாஷிற்கு வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்களை அறிமுகப்படுதினாள். அவன் அதுவரை பார்த்திராத பல அழகுகளை காண்பித்தாள். கேட்டிராத பல சப்தங்களை கேட்கவைத்தாள் உணர்ந்திராத பல சுகங்களை உணரச்செய்தாள். அவனுக்கு தாயக தாரமாக தோழியாக ஆசானாக பல அவதாரங்கள் எடுத்தாள்.

வானில் கரிய மேகங்கள் திரண்டு வரும் நாட்களில் அவள் சந்தோஷமாய் ஜன்னலருகே மிகவும் பிடித்த ஒரு நபரின் வருகைக்குக் காத்திருப்பது போல் மழைக்காக காத்திருப்பாள். ஜன்னலின் கம்பிகளுக்கு வெளியே கையை நீட்டி வெகுநேரம் காத்திருப்பாள். மழையின் முதல் துளி எதிர்பாராத தருணத்தில் புறங்கையில் ‘சொட்’ என விழ முகம் பூரித்துப்போவாள். மெதுவாய் பாட்டுப்பாடுவாள். ப்ரகாஷ் அவளை சந்தோஷமாய் வினோதமாய் பார்த்துக்கொண்டிருப்பான்.





ப்ரகாஷிற்கு நள்ளிரவு தாண்டி உறக்கம் கலைந்தது. ஜன்னலில் யாரோ கல் வீசி எறிவது போல் சப்தம் கேட்டு எழுந்துபோய் திறந்து பார்க்க மழை பெய்துகொண்டிருந்தது. ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே கையை நீட்ட கை நனைந்தது. ஜன்னல் கம்பிகளில் அவள் வாசம். மழையில் அவள் வாசம். அந்த சிறிய வாழ்க்கையை கூட எவ்வளவு நிறைவாய் மகிழ்வாய் வாழ்ந்திருக்கிறாள். எத்தனை ஆழமாய் வாழ்க்கையை இரசித்துச் சுவைத்திருக்கிறாள். பலருக்கு கற்றை கற்றையான பணமும் ஆடம்பரமும் புகழும் பதவியும் தந்துவிடாத சந்தோஷத்தையும் மனநிறைவையும் கல்பனாவிற்கு இந்த மழைத்துளிகளால் தரமுடிந்தது.

அந்த இரசனைகள் எப்படி இறந்து போயின? அந்த சந்தோஷங்கள் எப்படி சாம்பலாயின? மீன்றும் கேள்விகளின் இம்சை. மழை நின்று வெகு நேரமாகியும் ப்ரகாஷ் கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டி வைத்திருந்தான்.





“வாழ்க்கைல ஒரு மனுஷனுக்கு கிடைக்கக்கூடிய இணையில்லாத இன்பமும் ஒப்பற்ற செல்வமும் ஒரு குழந்தைதான். அந்த சந்தோஷத்தை என்னால உங்களுக்கு குடுக்க முடியாம போயிடுச்சே. என்னை மன்னிப்பீங்களா ப்ரகாஷ்?” அவள் கண்கலங்கிக் கேட்டள். திருமணமாகி மூன்றாண்டுகளாகியும் கல்பனா கருத்தரிக்காத காரணத்தால் மருத்துவரிடம் போய் இருவரும் சோதனை செய்து பார்த்தார்கள். பல சோதனைகளுக்குபின் கல்பனாவிற்கு இயற்கையாகவோ செயற்கையாகவோ கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.

“சீச்சீ. என்ன இது சின்ன பொண்ணு மாதிரி அழுதுகிட்டு. என் கல்பனாவே எனக்கு ஒரு குழந்தைதானே. நமக்கு எதுக்கு இன்னொண்ணு?” அவன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

“உங்க பெருந்தன்மை உங்களால இப்படி எளிதா சொல்லிட முடிஞ்சுது. ஆனா என்னால என்னை மன்னிக்கவே முடியாது ப்ரகாஷ்.”

“பெருந்தன்மை இல்ல கல்பனா. உன் மேல நான் வச்சிருக்கிற அன்பு. எனக்கு நீ தான் உயர்வான செல்வம் இணையில்லாத இன்பம். உன்னை தவிர உன்னோட இந்த அன்பை தவிர எனக்கு வேற எதுவும் வேண்டாம்.” அவன் அவளை நெருங்கி வந்து அணைத்துக்கொள்ள அவள் இன்னும் அதிகமாய் அழுதாள்.

ப்ரகாஷ் பவவிதமாய் ஆறுதல் சொல்லியும் அவள் குற்ற உணர்வில் தவித்தாள். தலையணை நனையும்படியாய் இரவுகளில் அழுதாள்.

அந்த நிகழ்விலிருந்தும் அதன் அதிர்விலிருந்தும் மீண்டு வர சில மாதங்களாயின. ஒருவிதமாய் அவர்கள் தங்களை தேற்றிக்கொண்டு ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவெடுத்த பொழுதுதான் அந்த இடி இறங்கியது.

சில நாட்களாய் அத்தனை வருட மணவாழ்வில் கண்டிராத ஒரு வாட்டத்தை ப்ரகாஷ் கல்பனாவின் முகத்தில் கண்டான். அடிக்கடி சோர்ந்துபோய் படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டாள் அவள் பட்டுக்கொண்டிருந்த வேதனை அவள் மறைக்க முயன்றும் முடியாமல் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. ப்ரகாஷ் தவித்துப்போனான்.

“கவலைப்படாதீங்க ப்ரகாஷ். சீக்கிரம் குணமாயிடுவேன்.” அவள் அவனுக்கு தனக்கே நம்பிக்கையில்லாமல் ஆறுதல் சொன்னாள்.

பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ப்ரகாஷை தனியை அழைத்து “கர்பப்பை புற்று நோய். குணமடையும் வாய்ப்பு குறைவு” என்றார்கள்.

செய்தியை அவளிடம் சொல்லும் பொறுப்பு ப்ரகாஷிடம் விடப்பட்டது. மருத்துவமனையில் “டெஸ்ட்ல எந்த ப்ராப்ளவும் இல்லை.” என்று சொல்லி அவளை வீட்டிற்கு அழைத்துவந்தான். அவன் சொன்ன செய்தியின் பலத்தில் அவள் சற்று தெம்பாய் உணர்ந்தாள். “எந்த ப்ரச்சனையும் இல்லாம இருந்தா மருதமலைக்குப் போறதா வேண்டிக்கிட்டிருந்தேன் ப்ரகாஷ். வியாழகிழமை லீவ் போட்டா போயிட்டு வந்திறலாம்.” என்றாள். ப்ரகாஷ் அவளை கட்டிக்கொண்டு கட்டுப்படுத்த முடியாமல் அழுதான். அவள் வற்புறுத்தி கேட்க விஷயத்தைச் சொன்னான். அவள் மெலிதாய் புன்முறுவல் பூத்தாள்.

தொடர்ந்து வந்த நாட்கள் ப்ரகாஷிற்கு நரகமாயிருந்தது. கல்பனா வெடித்து அழுதிருந்தால் கூட அவனுக்கு இத்தனை வேதனையாய் இருந்திருக்காது. மாறாக அவள் அவனை ஒரு புன்முறுவலுடன் எதிர்கொண்டு வதைத்தாள். மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டிருந்தாள். எங்கோ பயணம் போக காத்திருப்பது போல் இருந்தது அவள் நடந்துகொண்ட விதம். நிறைய கவிதை எழுதினாள் எழுதியதில் பிடித்ததை ப்ரகாஷிற்கு வாசித்துக் காண்பித்தாள் உலகத்தையும் வாழ்வையும் மாறாத நேசத்துடன் இரசித்துச்சுவைத்தாள். மழைக்காலத்தின் வரவிற்காய் காத்திருக்கத்துவங்கினாள். இடையே கீமோதெரப்பி ரேடியோதெரப்பி எல்லாம் பயன் தராமல் அவள் உடல்நலம் மெல்ல மெல்ல மோசமானது.

மழைக்காலம் வந்தும் மழை பிடிக்கவில்லை.

“மழை காலம் தொடங்கி இத்தனை நாளாகியும் மழை பெய்யலையே. எனக்கு கடைசியா ஒரு தடவை மழை பெய்யறதை பாக்கணும் ப்ரகாஷ்.’

நாட்கள் கடந்து சென்றன. ப்ரகஷிற்கு பதற்றமாயிருந்தது. கல்பனாவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலை அவன் மனதை அரித்து.

அடிக்கடி மொட்டை மடிக்குப்போய் வானத்தைப்பார்த்தான்.

“இன்னும் இருபது நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பில்லை.” வானியல் நிபுணர்கள் தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்தார்கள்.

செய்தி கேட்ட கல்பனாவின் முகம் வாடிப்போனது. ப்ரகாஷ் பதறினான். “இறைவா. ஒரு அற்புதத்தை நிகழ்த்திக்காட்டு.” கண்ணடைத்துப் ப்ரார்த்தனை செய்தான்.

வானியல் நிபுணர்களின் கணிப்பைப் பொய்யாக்கி அன்று இரவு கரிய மேகங்கள் திரண்டு வந்தன. படுக்கையில் படுத்திருந்த ப்ரகாஷ் இடி இடிக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தான். முதல் துளி அவன் முகத்தில் விழுந்தது. கண்ணில் நீர்கோர்க்க படுக்கையறைக்கு வந்தான். கல்பனா உறக்கத்திலிருந்தாள். அவளை மெதுவாய் உலுக்கி எழுப்பி அவள் கண்களை தன் கைகளால் பொத்தி ஜன்னலருகே அழைத்து வந்தான். கைகளை அகற்ற மெதுவாய் பெய்துகொண்டிருந்த மழையை கண்டு அவள் துள்ளிக் குதித்தாள். அவனை கட்டி முத்தமிட்டாள்.

“ப்ரகாஷ். கடைசியா ஒரு தடவை போய் மழைல நனைஞ்சிட்டு வரட்டுமா? ரொம்ப ஆசையா இருக்கு.”

ப்ரகாஷ் அவளை தடுக்கவில்லை.

கல்பனா வெளியே வந்தாள். வீதியில் இறங்கினாள். மழைத்துளிகள் அவளை நிமிடத்தில் ஈரமாக்கின. அவள் கைகளை விரித்து மெதுவாய் தன்னைத் தானே சுற்றி வந்தாள். ப்ரகாஷ் அவளை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு பிறகு ப்ரகாஷ் வற்புறுத்த அவள் மழைக்கு பிரியாவிடை கொடுத்து வீட்டிற்குள் வந்தாள்.

“இனி சந்தோஷமா கெளம்பலாம் ப்ரகாஷ் எனக்கு.” என்றாள்.

அடுத்து வந்த நாட்களில் அவள் உடல்நலம் மிக மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். “Critical condition. We will lose her any time.” என்றார்கள் மருத்துவர்கள்.

“இன்னும் ஒரு நாள்.” தினமும் இதே பிரார்த்தனையில் இருந்தான் ப்ரகாஷ். அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

“போகாதே கல்பனா.” உறங்கிக்கொண்டிருந்த அவள் செவியில் சொன்னான்.

அடுத்த நாள் அதிகாலையில் அவள் உயிர் பிரிந்தது. இறக்கும் முன் அவள் ப்ரகாஷை பார்த்து புன்முறுவல் பூத்து கேட்டாள்.

“என்னை மறந்திட மாட்டிங்களே?”






பருத்திக்கொட்டையிலிருந்து வெடித்துச்சிதறிய பஞ்சு போல் நாட்கள் பறந்து சென்றன. உறவினர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலும் காலம் இட்ட மருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக விதியின் வலிமையும் ப்ரகாஷை மறுமணம் முடிக்கவைத்தன. மகேஷ்வரி திருமணமான ஒரு வருடத்திலேயே கவிதாவை அவனுக்கு பெற்றுத்தந்தாள். வாழ்க்கை இவ்வாறாய் வேறொரு பாதையில் வேறொரு காலகட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த போதும் கூட இடையிடையே அவனுக்கு கல்பனாவின் நினைவு வந்தது. அவள் நினைவு வந்ததும் மரணம் குறித்த கேள்விகள் எழுந்தான்.






கல்பனா இறந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் ஒரு மழை நாளில்.

“என்ன இப்படி தொப்பலா நனைஞ்சிட்டு வந்திருக்கீங்க. கொஞ்சம் நேரம் ஆஃபீஸ்லயே இருந்திட்டு மழை நின்னப்புறம் கிளம்பிருக்கலாமே. உடம்புக்கு வந்திடுச்சுனா?” மகேஷ்வரி பதற்றமாய் அருகில்வந்து தலை துவட்டிவிட்டாள்.

“கவி எங்கே?”

“தோ. அந்த ரூம்ல விட்டுச் சாத்தியிருக்கேன். மழைல போய் ஆடணம்னு ஒரே அடம். இங்க விட்டிட்டு நான் சமையல் வேலையா இருந்திட்டா வெளிய ஓடிடுவானு பூட்டி வச்சிருக்கேன்.”

ப்ரகாஷ் உடைகளை மாற்றிக்கொண்டு கவிதா இருந்த அறை கதவை திறந்து உள்ளே நுழைகிறான். ஜன்னல் கம்பிகளிநூடே கைகளை நீட்டி அமர்ந்திருக்கிறது குழந்தை. அதன் பிஞ்சு விரல்களை நனைதுக்கொண்டிருக்கிறது மழைநீர்.

“கவிதா.”

அவள் திரும்புகிறாள். முகத்தில் குதூகலம். கண்கில் ஆனந்தம். அவளை பார்த்த மாத்திரத்தில் ப்ரகாஷின் மனதில் கல்பனாவின் முகம் தோன்றி மறைய அவன் அதிர்கிறான்.

“பாருங்கப்பா அம்மா வெளிய போகவிடாம பூட்டி வச்சிருக்காங்க. எனக்கு மழைல விளையாடணும்பா. ப்ளீஸ்.” குழந்தை ஏக்கமாய் கேட்டது.

“ப்ரகாஷ். கடைசியா ஒரு தடவை போய் மழைல நனைஞ்சிட்டு வரட்டுமா? ரொம்ப ஆசையா இருக்கு.”

ப்ரகாஷ் கவிதாவின் கரத்தை பற்றி அறையை விட்டு வெளியே அழைத்து வருகிறான். மகேஷ்வரி ஆச்சர்யமாய் பார்த்து நிற்க அவளை கடந்து வீட்டை விட்டு வெளியே தெருவிற்கு வருகிறான். கவிதாவின் கரத்தை மெல்ல விடுவிக்கிறான். கவிதா கைகளை விரித்துக்கொண்டு சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறாள்.

சரசரவென மழை துளிகள் கவிதாவின் மேல் விழுந்து அவளை நனைக்கின்றன. அவள் மகிழ்ச்சியில் நடனமாடுகிறாள். ப்ரகாஷ் அவளை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

“கல்பனா” மெதுவாக. மிக மெதுவாக அழைக்கிறான்.

கவிதா புன்முறுவல் பூத்த முகத்துடன் அவனை திரும்பிப்பார்க்கிறாள்.

மழை பலமாய் பெய்துகொண்டிருக்க அத்தனை வருடங்களாய் தன்னுள் எழுந்து இம்சித்த வினாக்களுக்கு விடை கிடைத்த சந்தோஷத்தில் ப்ரகாஷின் மனம் லேசாகிறது. மேற்கு திசையில் பலமாய் இடி இடிக்கிறது.



Some essense of individual life exists even after death. It may leave the corporal form that has perished, but it may re-enter the known world in a similar or different physical guise.



Monday, March 22, 2010

மேக்னா





விக்டர் ஹீரோ ஹோண்டவை ஒரு சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான். காற்றை எதிர்த்துப்பயணித்துக்கொண்டிருந்ததால் குளிர் காற்று உடலைத்தொட்டு சிலிர்க்கச்செய்தது. பில்லியனில் அமர்ந்திருந்த ப்ரகாஷ் மணிக்கட்டிலிருந்த கடிகாரத்தில் பார்வை போட்டான். நேரம் இரவு ஒன்பதை கடந்திருந்தது.

“நம்ம எங்க போயிட்டிருக்கோம்?” என்றான் ப்ரகாஷ் விக்டரிடம்.

“க்ராண்ட் ரோட்.” என்றான் விக்டர். திரும்பி ப்ரகாஷை பார்த்துக் கண் சிமிட்டினான்.

“க்ராண்டு ரோடா?”

“ஆமாம். க்ராண்ட் ரோட் தான். பம்பாயின் சிவப்பு விளக்குப் பகுதி.”

ப்ரகாஷ் எதுவோ கூற முற்பட்ட விநாடி சாலையின் மத்தியில் அந்த இளைஞர் கும்பல் தோன்றியது. கைகளை நீட்டி வலுக்கட்டாயமாய் இவர்கள் வண்டியை நிறுத்தியது. எக்கச்சக்கமாய் அழுக்கேறிய ஜீன்சும் காதில் கடுக்கனும் அணிந்திருந்த இளைஞர்கள் அவர்களை நெருங்கி வந்தார்கள். “Happy New Year” என்று நரம்பு புடைக்கக் கத்தினார்கள். ஒவ்வொருவராய் கைகுலுக்கினார்கள். அனைவரின்மீதிருந்தும் பீரின் வாடையும் நிக்கோடீனின் நாற்றமும் அடித்தது. பலூன்களை ஊசியால் குத்தியுடைத்து உல்லாசமாய் ப்ரகஷையும் விக்டரையும் வழியனுப்பிவைத்தார்கள். விக்டர் வண்டியை உயிர்ப்பித்து செலுத்தினான். சாலையின் இருமருங்கிலும் நிறைய இளைஞர்களும் இளைஞிகளும். இவர்கள்மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்தார்கள்.

விக்டர் வாகனத்தை க்ராண்ட் ரோட் நோக்கிச் செலுத்தினான்.

“வேண்டாம் விக்டர். தப்பு.” என்றான் பிரகாஷ்.

“Everything is fair on a New Year’s eve.” என்றான் விக்டர்.

ப்ரகாஷ் மறுக்க முயன்றான். அவன் இரத்தத்தில் கலந்திருந்த ஆல்கோஹால் அவனைத்தடுத்தது. எதுவும் பேசவிடாமல் செய்தது. விக்டர் சற்று சப்தமாக ப்ரகாஷிற்கு கேட்கும்படியாக தன் லீலைகளை விவரித்துக்கொண்டிருந்தான்.

“இதவரை மூன்று முறை போயிருக்கேன். முதல் தடவை ஒரு பெங்காலி பெண். கடுகெண்ணை நாற்றம் என்றால் அப்படி ஒரு கடுகெண்ணை நாற்றம் அவள் மேல். மூக்கை பிடித்து கொண்டே ...” உரக்கச் சிரித்தான் அரை வாக்கியத்தில் நிறுத்தி.

“இரண்டம் முறை ஒரு தெலுங்கத்தி. பலமாதமாய் தண்ணீர் காணாத உடல். மட்டமான பவுடர் வாடை. இது போதாதென்று நம் பாஷையும் தெரியாதவள். எது பேசத்துவங்கினாலும் பாதியில் குறுக்கிட்டு ஒரு ‘ஏவண்டி’ போடுவாள். அவளை ஒரு வழியாய் புரியவைத்துப் படுக்கசெய்யவே பாதி நேரம் ஆயிடுச்சு. வரும்போது நான்கு தமிழ் கெட்டவார்த்தை சொல்லிகுடுத்திட்டு வந்ததேன் அவளுக்கு.”

“அடுத்த முறை ஒரு தமிழ் பெண். ஆயிரம் தான் சொல்லு தமிழ் பெண் தமிழ் பெண்தான். பேருகூட கவிதாவோ கலாவோ என்னவோ சொன்னா. கொடுத்த காசிற்கு ஈடான திருப்தி. அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன். தமிழுக்கு மாறிட்டேன். இந்த விஷயத்திலயாவது இனப்பற்று காட்டுவோமே.” மீண்டும் உரக்கச் சிரித்தான்.

“அத்தனை மாநிலமும் இருக்கும். உனக்கு வேண்டியதை தேர்ந்தெடுதுக்கலாம்.”

விக்டர் வாகனத்தை திருப்பி கிராண்டு ரோட்டில் நுழைத்தான்.


அவர்கள் க்ராண்ட் ரோடிற்குள் நுழைந்ததுமே ‘மாமாக்கள்’ அவர்கள் வாகனத்தைச்சூழ்ந்து நிறுத்த முற்படுகிறார்கள்.

‘கேரளா. ஆந்திரா. தமிழ்நாடு. நார்த் இந்தியா.’ என்று லாட்டரி வியாபாரிகள் போல கூவி அழைக்கிறார்கள்.

சாலையின் இருபுறமும் பாதியுடையில் மட்டமான பவுடர் பூச்சும் அடர்த்தியான உதட்டுச்சாயமுமாய் பெண்கள் நிற்கிறார்கள். கண்ணடித்தும் கீழுதட்டை கடித்தும் இவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

விக்டர் அவர்களை புறக்கணித்துவிட்டு ஒரு இரண்டு மாடிக்கட்டிடத்தை சமீபித்து வாகனத்தை நிறுத்தினான். ப்ரகாஷ் பில்லியனிலிருந்து இறங்கிக்கொள்ள சில பெண்கள் வந்து அவன் கரத்தை பற்றியிழுக்க முற்படுகிறார்கள். விக்டர் அவர்களை தோள்மேல் கைவைத்து எக்கித் தள்ளிவிட்டு ப்ரகாஷை இழுத்துக்கொண்டு அந்த கட்டிடத்திற்குள் நுழைகிறான். புறக்கணிக்கப்பட்ட வேசிகள் முடுகுக்குபின் கதம்பமாய் பல மொழிகளில் கெட்ட வார்த்தை பேசி இவர்கள் மேல் காறி உமிழ்கிறார்கள்.

விக்டர் அந்த விசாலமான அறைக்குள் நுழைகிறான். ப்ரகாஷும்.

“வாங்கோஜி. வாங்கோ.” ஒரு தடித்த பெண்மணி வெற்றிலை சாற்றினால் சிவபேறியிருந்த வாயால் இவர்களை அழைக்கிறாள்.

“என்ன பார்க்கவே முடியல?” என் விக்டரை உரிமையுடன் கடிந்துகொள்கிறாள்.

“இது யாரு தோஸ்தா?” மழையில் நனைந்த கோழி போல் நின்றிருக்கும் ப்ரகாஷைப் பார்த்துக் கேட்கிறாள். “உம்.” என்றான் விக்டர்.

“ஆந்திராவா? கேரளாவா? தமிழ்நாடா?” விக்டர் கிசுகிசுப்பாய் ப்ரகாஷின் காதில் கேட்டான். ப்ரகாஷ் பதில் பேசவில்லை.

விக்டர் அந்த தடித்த பெண்மணியை நோக்கி “இரண்டு தமிழ்நாடு.” என்றான் ஹோட்டலில் நாஷ்த்தா ஆர்டர் செய்வது போல.

“புதுசா ஒரு பெங்காலி பொண்ணு வந்திருக்கு. பதினஞ்சு வயசுதான்.” தடித்த பெண்மணி விக்டரை பார்த்துக் கண்சிமிட்டிக் கூறினாள்.

விக்டர் அந்த வலையில் விழப்பார்த்தான். இனப்பற்றும் அதற்க்கு மேலாக அந்த கடுகெண்ணைகாறியின் நினைவுகளும் அவனை தடுக்கலாயின.

“இல்லை. தமிழ்நாடு போதும்.” என்றான்.


“ஜலஜா. மேக்னா.” அந்த பெண்மணி மாடியை நோக்கிக் குரல் கொடுத்தாள். பத்தாவது வினாடியின் முடிவில் மாடியில் இரண்டு பெண்கள் தோன்றினார்கள் படியிறங்கி வந்து இவர்களை சமீபித்தார்கள்.

“சார நல்லா கவனிச்சு அனுப்பு. நம்ம ரெகுலர் கஸ்டமர்.” என்றாள் அந்த பெண்மணி. விக்டர் ஜலஜாவின் இடுப்பை வளைத்து அவளை தொடக்கூடாத இடங்களில் தொட்டான். அவள் சிரித்தாள்.

“Have a nice time.” விக்டர் ப்ரகாஷிடம் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

மேக்னா நடக்கத்துவங்கியிருந்ததை உணர்ந்து ப்ரகாஷ் அவளை தொடர்ந்தான்.

அவள் அவனை ஒரு எட்டுக்கு எட்டு அறைக்குள் அழைத்துச்சென்றாள். அவன் உள்ளே நுழைய அவள் கதவை அடைத்துத்தழிட்டாள். அந்த அறையில் ஒரு சின்ன கட்டிலிருந்தது. கட்டிலில் அதிகமாய் கசங்கிய ஒரு போர்வை. கட்டிலின் பக்கவாட்டில் ஒரு குட்டை மேஜை. அதன் மேல் அழுக்கேறிய வாட்டர் ஜக். அதற்குள் தண்ணீர்.

அந்தப் பெண் கட்டிலைச் சுட்டிக்காட்டி ‘உட்கார்’ என்பது போல் பாவனை செய்தாள். அவன் உட்கார்ந்தான். புழுக்கமாகவும் படபடப்பாகவும் உணர்ந்தான். தொப்பலாய் வியர்த்திருந்தது. அவள் அவனது சட்டையை இலாவகமாய் அகற்றினாள்.

ப்ரகாஷ் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் மெலிதாய் புன்னகைத்தாள். வசீகரமான கண்களுக்கு மைதீற்றியிருந்தாள். சின்னதாய் பொட்டு வைத்திருந்தாள். பொட்டின் மேல் ஒரு சந்தன கீற்று. கூந்தலை வகிடெடுத்து வாரி கொண்டயாய் போட்டிருந்தாள். சிவப்பு நிறத்தில் சேலையும் அதே நிறத்தில் இரவிக்கையும் அணிந்திருந்தாள்.

அவள் ப்ரகாஷை படுக்கையில் சாய்த்தாள். ப்ரகாஷின் கரம் அருகே மேஜைமேலிருந்த ஜக்கைத் தட்டிவிட அது சப்தமாய் சரிந்து விழுந்து தரையை ஈரமாக்கியது. அவள் அதுகுறித்து கவலை கொள்ளாதவளாய் ப்ரகாஷின் மார்பில் விரலால் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். தன் மார்புச்சேலையை விலக்கிக்கொண்டு அவன் மேல் சரிந்து அவன் முகத்தை நெருங்கி முத்தமிட முயன்ற வினாடியில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

அவர்கள் இருந்த அறையின் கதவு படபடவென சப்திக்கபட்டது. ப்ரகாஷ் திடுக்கிட்டான்.

அந்தப் பெண் சப்தத்தைச் சட்டை செய்யாமல் அவனை மேலும் நெருங்கினாள். பட் பட் பட். சப்தம் தொடர்ந்து கேட்டது. ப்ரகாஷ் அவளை விலக்கிவிட்டு எழுந்தான். சட்டையை அணிந்துகொண்டு கதவை நெருங்கினான். இருதயத்துடிப்பு அதிகரித்திருந்தது. கதவை மெல்ல திறந்தான். வெளியே ஒரு நடுத்தர வயது ஆள் நின்றிருந்தான். அவன் கை ஒரு பெண்ணின் இடுப்பை வளைத்துப் பற்றியிருந்தது. அறைக்குள் கஸ்டமர் இருப்பதை உணர்ந்து அவன் ‘சாரி’ சொல்லிவிட்டு நகர்ந்தான். ப்ரகாஷ் கதவை சாத்தித்தாழிட்டுவிட்டு கட்டிலில் படுத்திருந்த மேக்னாவை நெருங்க அவள் அவனை அணைத்துக்கொண்டாள். அவனுக்குச் சூடான முத்தங்கள் தந்து பின் ச்ப்ரிசத்தால் குளிரவைதாள். அவளது தீண்டல் ஏற்றிய போதை உடலின் உள்ளே புகுந்து ஆல்கோஹாளின் போதையுடன் சண்டை போட்டது. எங்கிருந்தோ ஒரு பெண்ணின் அலறல் சப்தம் கேட்டது. மேக்னா முத்தத்தில் மும்முரமாய் இருந்தாள். அரை மணி நேர சில்மிஷத்திற்குப்பின் அவர்கள் சங்கமிதார்கள்.

ப்ரகாஷும் அவளும் படுக்கையில் வேறு வேறு திசைபார்த்துப் படுத்தவாறு சற்று நேரம் இளைப்பாறினார்கள். கதவு சப்திக்கப்படும் ஓசை கேட்டது. விக்டரின் குரல் அவன் பெயரை அழைப்பது கேட்டது. ப்ரகாஷ் எழுந்து சட்டை அணிந்து கொண்டான். மேக்னாவும் எழுந்து உடையை சரிசெய்துகொண்டாள். ப்ரகாஷ் அவாளை பார்த்தான். அவள் புன்னகைத்தாள். ப்ரகஷிற்கு அவளிடம் பேசவேண்டும்போலிருந்தது. என்ன பேசுவதென்று பிடிபடவில்லை. விக்டரின் குரல் இப்பொழுது உயர்ந்திருந்தது. ப்ரகாஷ் சில வினாடிகள் தயங்கிவிட்டு எதுவும் பேசாமல் கதவை திறந்து வெளியேறினான்.


இரண்டு நாட்கள் கடந்து சென்றன. ஒரு மதியப்பொழுதில் ப்ரகாஷும் விக்டரும் அவர்களது மான்ஷன் அறையிலிருந்தார்கள். விக்டர் கண்ணாடி குவளையில் பீர் குடித்துக்கொண்டிருந்தான். ப்ரகாஷ் கட்டிலில் குப்புறப்படுத்து விரலிடுக்கில் இருந்த அழுக்கை தீக்குசியால் நிமிண்டி எடுத்துக்கொண்டிருந்தான். கட்டைவிரலின் அழுக்கைக்களைந்த ப்ரகாஷ் தீக்குச்சியைத் தூர எறிந்து விட்டு விக்டரின் பக்கம் திரும்பினான்.

“விக்டர்.”

“உம்.”

“எனக்கு அவளை பார்க்கணும் போல இருக்கு.” ப்ரகாஷ் உள்ளங்கையை உற்றுப்பார்த்தபடி சொன்னான்.

“யாரை?” விக்டர் சுரத்தில்லாமல் கேட்டன்.

“அவதான். அண்ணைக்கு போயிட்டு வந்தமே. முப்பத்தொண்ணாம் தேதி. க்ராண்ட் ரோட்ல.”

“அப்படி வாடா விஸ்வாமித்ரா. அண்ணைக்கு என்னமோ டயலாக் விட்டே. இப்ப ருசி கண்ட பூனை அடுப்பை தேடுதோ? அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும். ஆனா அடிக்கடி விளையாடினா உடம்பு கெட்டுடும். அப்புறம் குற்றம் புரிந்தவன் வாழ்கையில் நிம்மதி பெறுவதென்பதேது காந்தா கதைதான். அளவோடு சுவைத்து இன்புற்றிருக்கணும்.”

“அதெல்லாம் இல்ல விக்டர். அவளை மறக்க முடியலை. மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு அவளோட நினைப்பு. பார்த்துப்பேசணும் போல இருக்கு.

விக்டர் பதில் பேசாமல் அவனை பார்த்தான்.

“அந்த கண்ணு. அந்த சிரிப்பு. இந்த இரெண்டு நாளா அவ நினைப்புதான் முழுசா. பாவம் விக்டர் அவ. இந்த தொழில்ல வந்து மட்டியிருக்கா. என்ன கஷ்டமோ. நெத்தில சந்தனப்பொட்டு வச்சிருந்தா.”

“கண்ணு அழகாயிருந்திருக்கலாம். சிரிப்பு அழகாயிருந்திருக்கலாம். சந்தனப்பொட்டு வச்சிருந்திருக்கலாம். ஆனா அவ ஒரு வேசி. பணத்துக்காக உடம்பை விக்கறவ.”

“தெரியும் விக்டர். ஆனா மனசு அவளைப் பார்க்கணும்னு அடம் பிடிக்குது. என்னை கூட்டிட்டு போவியா?”

விக்டர் பதில் சொல்லும்முன்னரே ப்ரகாஷின் மனதில் மின்னலாய் அந்த எண்ணம் தோன்றியது.

“விக்டர்.”

“சொல்லு.”

“நமக்கு அவளை அங்கிருந்து மீட்டிடு வரமுடியுமா?”

“மீட்டிட்டு வரது போயி அப்படி ஒரு எண்ணத்தோட அங்க போனாலே கைய கால உடைச்சிடுவாங்க அங்க காவலுக்கு இருக்கற அலிகள்.”

“பணம் குடுக்கலாம். அவங்க கேக்கர பணம்.”

“அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. அந்த கட்டிடத்துக்குள்ள நுழைஞ்சிட்ட பெண்ணுக்கு விமோசனமே கிடையாது. மறந்திடு அவளை.”

“வேற ஏதாவது வழில முயற்சி பண்ணினா என்ன? கஸ்டமர்களை வளைக்க அந்த ரோட்டோரமா பொண்ணுங்க நின்னிட்டிருந்ததை பார்த்தோமே. அது மாதிரி ஒரு குறிப்பிட்ட நாள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில அவளை வந்து நிக்கசொல்லுவோம். வண்டியை எடுத்துட்டு போயி அவளை கடத்திட்டு வந்திருவோம்.”

“வந்து?”

“வந்து அவ கைல கொஞ்சம் பணம் கொடுத்து எங்கயாவது போயி நிம்மதியா இருக்கச் சொல்லி அனுப்பிவைப்போம்.”

விக்டர் பிடிகொடுத்துப் பேசவில்லை.

“நல்ல பொண்ணா தெரிஞ்சா. வரக்கூடாத இடத்துல வந்து அகப்பட்டிருக்கா. எத்தனையோ பாவம் பண்ணறோம். இது ஒரு ப்ராயச்சித்தமா இருக்கும்.”

ப்ரகாஷின் மன்றாடல்களும் அவன் காட்டிய தீவிரமும் விக்டரின் மனதை மாற்றின.

“அலிகள் கையால அடிபட்டுச் சாகணும்னு தலைல எழுதியிருயந்தா அத யாரால மாத்த முடியும்.” என்றான் விக்டர் முடிவாக. பச்சைக் கொடி.

அடுத்த நாள் இரவு அவர்கள் மீண்டும் க்ராண்ட் ரோட் சென்றார்கள்.

“விஷயத்தை தெளிவா சொல்லிப் புரியவை அவளுக்கு. வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணி. வெள்ளை அம்பாசிடர். தோ அந்த பீடா கடை பக்கத்தில. புரிஞ்சிதா?” விக்டர் ப்ரகாஷை தாயார் படுத்தினான்.

“உம்.” என்றான் ப்ரகாஷ்.

ரெகுலர் கஸ்டமர் என்பதால் பெண்ணை தேர்ந்தெடுக்கும் உரிமை விக்டருக்கு தரப்பட்டது.

“மேக்னா.” என்றான் விக்டர். அவள் வந்ததும் ப்ரகாஷுடன் அனுப்பி வைத்தான்.

இன்று அவள் ப்ரகாஷை வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள். கதவை தாழிட்டுவிட்டு அவன் சட்டையை கழட்ட முற்பட்டவளை அவன் தடுத்தான்.

“வேண்டாம். இன்னைக்கு நான் வந்திருக்கிறது வேற விஷயமா. இந்த நரகத்தில இருந்து உன்னை மீட்டுப்போக வந்திருக்கேன். என்னோட வந்திடு.”

அவன் அவளுக்கு திட்டத்தை விளக்கி முடித்தான். அவள் எதுவும் பேசவில்லை. அவள் முகத்தில் ஒரு சோர்வு தெரிந்தது. கண்களில் வேதனை தெரிந்தது. அவன் சற்று நேரம் படுக்கையில் அவள் எதிரே அமர்ந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான். இன்றும் சந்தனப்பொட்டு வைத்திருந்தாள்.

விடைபெற்று வரும்பொழுது அவள் மெலிதாய் புன்னகைத்தாள்.


ஐந்து நாட்களின் இடைவெளி ப்ரகஷிற்கு ஐந்து ஆண்டுகள் போலிருந்தது. அவன் மேக்னாவுக்கு ஒரு சேலை வாங்கியிருந்தான். கொஞ்சம் பணம் கடன்வாங்கி வைத்திருந்தான் அவளுக்கு கொடுப்பதற்கு.

வெள்ளிகிழமை. விக்டர் உடன் வந்தான். ஒரு வாடகை கார் அமர்த்திக்கொண்டு அவர்கள் க்ராண்ட் ரோட் போனார்கள். காரை ஓரமாய் போடாச்சொன்னான் விக்டர். நேரம் 9:25. பத்து நிமிடத்தை காத்திருப்பில் விரயமக்கினார்கள்.

“போலாமா?” என்றான் விக்டர்.

“உம்.” என்றான் பிரகாஷ்.

வாகனம் அந்த சாலையில் நுழைய மாமாக்கள் நெருங்கிவந்தார்கள். ஜன்னலில் தட்டினார்கள். விக்டர் அவர்களை விரட்டினான். சாலையின் ஓரமாய் பெண்கள் கூட்டம். சிறிது தூரம் பயணிக்க கூட்டம் குறைந்தது. அங்கங்கே தனித்தனியாய் ஓரிரு பெண்கள் நீச்சலுடை அளவிலான ஆடை உடுதி நின்றிருந்தார்கள். இவர்களை பார்த்துக் கீழுதடு கடித்தார்கள்.

அந்த பீடா கடை இருந்த இடம் இருட்டியிருந்தது. ப்ரகாஷ் அதனருகே பார்வைபோட்டான். அவள் இருக்கவில்லை.

“காணமே.” என்றான் ப்ரகாஷ் விக்டரை பார்த்து.

“எனக்கு தெரியும் அவ வரமாட்டானு. ஆரம்பத்துல தான் கொடுமையா இருக்கும். அதுக்கப்புறம் பழகிடும். வெளிய வரணும்னு நெனச்சாலும் பணத்தாசை விடாது.”

“அசிங்கமா பேசாதே விக்டர். ஏதாவது தேவடியா மகன்கிட்ட மட்டியிருப்பா.” ப்ரகாஷ் ஆத்திரமாய்ச் சொன்னான்.

“கொஞ்சம் நேரம் நின்னு பாப்போம்.” என்றான் ப்ரகாஷ். வாகனத்தை திருப்பிப்போட்டார்கள்.

“போலாமா?” என்றான் விக்டர் ஒரு மணி நேர காத்திருப்பிற்குப்பின். ப்ரகாஷ் தலை அசைத்தான். இன்னும் அவளை தேடிக்கொண்டிருந்தான்.

வண்டியை உயிர்ப்பித்துச் செலுத்த மீண்டும் மாமாக்கள் கூட்டம். கொத்துக்கொத்தாய் பெண்கள். அந்த கூட்டத்திலும் அவள் ப்ரகாஷின் பார்வையில் தெள்ளத்தெளிவாய் பட்டுவிட்டாள். சாலையோரமாய் அடர்த்தியான உதட்டுச்சாயம் பூசி நின்றிருந்தாள். சந்தனப்பொட்டு வைத்திருந்தாள்.

“தேவடிய மக.” என்றான் ப்ரகாஷ்.

விக்டர் உரக்க சிரித்தான்.

ஐந்து மாதங்களுக்குப்பின் ஒரு பௌர்ணமி இரவில் ப்ரகாஷ் படுக்கையில் மல்லாக்கப்படுத்திருந்தான். அவனது நினைவுக்கோர்வையில் சட்டென அவள் நினைவு வந்து இணைந்ததுகொண்டது. மேக்னாவின் நினைவு. இத்தனை நாட்கள் முழுவதுமாய் மறந்துபோயிருந்தவள் நினைவு அவன் ஆச்சர்யப்படும்படியாய் அவன் மனதில் வந்து உட்கார்ந்துகொண்டது. அவளது புன்னகையும் சந்தனப்பொட்டும் நினைவில் வந்தன. அவள் கண்களும். அந்த கண்கள் அவனிடம் எதுவோ கூற முற்படுவதைப்போல் பட்டது.

அவனுக்கு அவர்கள் முதன்முறை சந்தித்த அறை நினைவிற்கு வருகிறது. அந்த அறையில் அவன் கைபட்டு தண்ணீர் ஜக் சப்தமாய் தரையில் விழுகிறது. அவளிடம் அசைவு இல்லை. கதவு பலமாய் சப்திக்கப்படுகிறது. அவளிடம் அசைவு இல்லை. இரண்டாவது சந்திப்பில் அவன் அவளை அங்கிருந்து விடுவிப்பதை சொன்ன பொழுதும் கூட அவளிடம் எந்தவித பாவமாற்றமும் இல்லை.

ப்ரகாஷிற்கு யாரோ எதிர்பாராத தருணத்தில் ‘பளீர்’ என்று அறைந்ததுபோல அந்த உண்மை உறைத்தது. அவள் காது கேளாதவள். அவசரமாய், உறங்கிக்கொண்டிருந்த விக்டரை எழுப்பிச்சொன்னான்.

“தப்பு பண்ணிட்டேன் விக்டர். அவளை தப்பா பேசிட்டேன்.” ப்ரகாஷ் முகத்தில் அறைந்துகொண்டான்.

அடுத்த நாள் அவர்கள் மீண்டும் க்ராண்ட் ரோட் போனார்கள். ஒரு நடுத்தர வயது ஆள் நெருங்கி வந்து ‘கேரளா. ஆந்திரா. தமிழ்நாடு. நார்த் இந்தியா’ என்றான். இவர்கள் பதில் பேசாதிருந்ததைத் தொடர்ந்து “தமிழா?” என்றான். ப்ரகாஷ் விக்டரை தனியே அழைத்துச்சென்று “இவனிடம் கேட்போமா?” என்றான்.

“இனி அந்த பொம்பளகிட்ட போய் அதே பொண்ணை கேட்டா சந்தேகப்படுவா. அப்புறம் ப்ரச்சனை ஆயிடும்.” என்றான் விக்டர்.

அந்த நடுத்தர வயது ஆள் இவர்களை நெருங்கினான்.

“மேக்னானு ஒரு பொண்ணு. கிடைக்குமா?” விக்டர் கேட்டன்.

“இதுக்கு முந்தி வந்திருக்கீங்களா? இன்னா பேரு சொன்னீங்க?”

“மேக்னா.”

“கரெக்ட் பேராயிருக்காது சார். ஒவ்வொரு தபா ஒவ்வொரு பேரு சொல்லுவாளுக. அதுலயெல்லாம் நெறைய விஷயமிருக்கு. அப்பால ராங்காயிடும்.”

“கொஞ்சம் யோசிச்சு பாருங்க. தோ இந்த உயரம் இருப்பா. நீளமான முடி. முகத்துல இந்த இடத்துல ஒரு மச்சமிருக்கும்.” ப்ரகாஷ் அடையாளங்களை சொன்னான். அவளை பரிச்சயப்படுத்திய பெண்மணியின் பெயரை விக்டர் சொன்னான்.

“ஓ. அந்த பொண்ணா? நெத்தில சந்தனம் கூட வச்சிருக்குமே?”

ப்ரகஷிற்கு உயிர் வந்தது.

“அவளே தான்.” என்றான் அவசரமாய்.

“அது பேரு கல்பனாங்க. ஊரு திருச்சி. அவ மாமனோ பெரியப்பனோ தான் இங்க இட்டாந்து வந்தான். முதல்லலாம் ரொம்ப பேஜார் பண்ணிச்சு. அண்டர்க்ரௌண்ட் ரூம்ல பட்டிணியோட அடைச்சுப்போட்டு கொடுமை பண்ணினாங்க. அப்பால கரெக்ட் ஆயிடிச்சு. அல்லாமே அப்படிதாங்க மொதல்ல ராங் பண்ணும. அப்பால ஓகே ஆயிடும். அதுக்கு காது கேக்காது. வாயும் பேசமுடியாது. இந்த தொழிலுக்கு அதெல்லாம் முக்கியம் கிடையாது. நல்லா அம்சமா இருக்கும்.”

“இன்னைக்கு கிடைப்பாளா?” ப்ரகாஷ் கேட்டன்.

“அந்த பொண்ணு இனி கிடைக்காதுங்க. இந்த தொழில்கரிங்களுக்கே வரக்கூடாத சீக்கு வந்திருச்சு. அப்படி சீக்கு வந்ததுகளை இங்க வச்சிருக்க மாட்டாங்க. பக்கத்துல தாராவி சாக்கடையாண்ட கொண்டுபோய் விட்டிருவாங்க. ஏதானு சமூகசேவைகாரங்க கூட்டிகினு போவாங்க. கொஞ்ச நாள்ல சீக்கு முத்திபோயி செத்துப்போயிடுங்க. அவங்க வாழ்க்கை அவ்வளவுதான். வேற நிறைய தமிழ்நாட்டு பொண்ணுங்க இருக்கு. இந்த ஆல்பத்தை பாருங்க.” அவன் நீட்ட ப்ரகாஷும் அவனை தொடர்ந்து விக்டரும் நகர்ந்து செல்கிறார்கள்.

“சார். சார்” என்று அவன் முதுகுக்கு பின்னால் கூப்பிடுவது கேட்டத்து.

விக்டர் ப்ரகாஷின் கரத்தை ஆதரவாய் அழுத்திக்கொடுத்தான். ப்ரகாஷிற்கு அவள் நினைவு வருகிறது. அவள் புன்னகையும் சந்தனப்பொட்டும். அவன் கண்கள் நிறைந்து வழிகின்றன.