Monday, February 28, 2022

ஐந்தாவது கொலை - Chapter 5

 சுபா மாயாவைத் துரைப்பாக்கத்திலிருந்த ஃப்ளாட்டிற்கு அழைத்து வந்தபொழுது நேரம் இரவு எட்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்து. மதிய நேரம் போலில்லாமல் இப்பொழுது ஆள் நடமாட்டமிருந்தது. நிறைய பேர் இவர்களிருவரையும் வெறித்தபடி கடந்துசென்றார்கள். 

 

“இப்போ தான் ஷூட் முடிஞ்சு வந்திருப்பாரு. இந்த நேரத்துல வந்தாத்தான் நம்ம பேசரது எதுவும் நினைவுல நிக்கும். பொகை விட அரம்பிச்சிட்டா அப்புறம் எல்லம் சித்தன் போக்கு சிவன் போக்குதான். கொஞ்சம் அப்பிடி இப்படி இருந்தாலும் ரொம்ப எல்லாம் வரம்பு மீராது. தைரியமா பேசு.”

 

கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டு சுபா அமைதியானாள். மாயா தலைமுடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டாள். கதவை திறந்த அவன் சுபாவையும் மாயாவையும் மாறிமாறி பார்த்துவிட்டு சுபாவின்மேல் பார்வையை நிறுத்தினான்.

 

“சொல்லியிருந்தேனே. மாயா. படத்துல நடிக்க சான்ஸ் தேடிட்டிருக்கா.” என்றாள் சுபா.

 

கதவை அகலமாய் திறந்து பிடித்துக்கொண்டு ‘வாங்க’ என்றான் அவன்.

 

அவர்கள் உள்ளே நுழையவும் சோஃபாவைச் சுட்டிக்காண்பித்துவிட்டு கதவை அடைக்கப்போனான்.

 

"நீங்க பேசிக்கிட்டிருங்க. எனக்கு கொஞ்சம் வெளி வேலையிருக்கு." என்றாள் சுபா. அவள் வெளியேறியதும் கதவை அடைந்தவன் மாயவைப்பார்த்து 'உக்காரு' என்றுவிட்டு எதிர்புறமிருந்த ஒரு அறையில் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான்.

 

மாயா அவள் அமர்ந்திருந்த அறையை விழிகளைச் சுழற்றிப்பார்த்தாள். தரை சற்று நேரம் முன்பு துடைக்கப்பட்டதுபோல் ஈரமாயிருந்தது. அவளுக்குப் பின்புறச் சுவற்றிலிருந்த புத்தக அலமாரியில் நிறைய புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. மாயா எதிர்புறமிருந்த கதவைப் பார்த்துச் சற்று தங்கிவிட்டு எழுந்து புத்தக அலமாரியை நெருங்கினாள். அதிகமும் சினிமா தொடர்பான புத்தகங்கள். கொஞ்சம் உலக இலக்கியம்.

 

அவள் சிட்னி லூமெட்டின் மேக்கிங் மூவீசை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தபொழுது கதவு திறக்கப்படும் சப்தம்கேட்டு அதிர்ந்தாள். செய்யக்கூடாத எதையோ செய்து மாட்டிக்கொண்டவள்போல ஒருவித வெட்கத்துடனும் அச்சத்துடனும் எதிரே நின்றுகொண்டிருந்த அவனைப் பார்த்தாள். அவளுடைய காரணமில்லாத கலவரத்தைக்கண்டதும் அவனுடைய உதட்டில் மெலிதான புன்முறுவல் மலர்ந்தது. அதைக்கண்டதும் அவளும் மெல்லப் புன்னகைத்தாள்.

 

"பொரட்டிப் பார்க்கத்தானே எடுத்தே? திருடப்பார்த்தமாதிரி எதுக்கு இப்படி பதட்டப்படறே?" என்றான் அவன் சிரித்தவாறு.

 

"இல்லை. படிச்சிக்கிட்டிருந்தப்போ திடீர்னு கதவு திறந்ததிலே..." என்றாள் அவள் மெல்லிய குரலில். அவன் அதற்குள் சோஃபாவைச் சுற்றிக்கொண்டு அவளருகே வந்திருந்தான். அவள் கையில் பற்றியிருந்த புத்தகத்தைப்பார்த்து 'படிச்சிருக்கியா?' என்றான் அவன்.

 

"இல்லை. ட்வெல்வ் ஆங்கிரி மென் பார்த்திருக்கேன்."

 

அவன் சற்றுநேரம் பார்வையை அவள்மேல் நிறுத்திவைத்தான். மாயா வெட்கப்படுவதையுணர்ந்து அவன் விலகிச்சென்று சோஃபாவில் அமர்ந்துகொண்டான். 'உட்காரு' என்றான் அவளிடம் எதிர்புறமிருந்த இருக்கையைக் காட்டி. மாயா தயங்கியபடி உட்கார்ந்தாள். அவன் அவளைப் பார்த்தவாறு சிக்ரெட்டொன்றை எடுத்து உதட்டிற்குக்கொண்டுபோனான். அவளுடைய முகத்தில் மெலிதான மாறுதலொன்றைக் கவனித்தவன் சிகரெட்டைப் பெட்டியில்போட்டுச் சட்டைப்பையில் போட்டுக்கொண்டான். இன்னும் அவளைப் பார்த்தவாறிருந்தான்.

 

"சிட்னி லூமெட் படமெல்லாம் பாக்கறே. என்ன வயசு உனக்கு?" என்றான் அவன்.

 

"இருபத்திமூணு."

 

"எந்த ஊரு?"

 

"கோயம்பத்தூர்."

 

"எத்தனை நாளா சான்ஸ் தேடிக்கிட்டிருக்கே?"

 

"ஒரு ஆறு மாசமா."

 

"எதுக்கு படத்துல நடிக்கணும்?"

 

"சின்ன வயசிலேயிருந்தே சினிமாமேல ஒரு க்ரேஸ். இத்தனை வேறவேற கலைகள் சேர்ந்து ஒரு படைப்பா உருமாறற அந்த மேஜிக்மேல ஒரு பெரிய ஈர்ப்பு. அதைப் பக்கத்துல இருந்து பார்க்கணும்னும் அதுல ஒரு பகமாயிருக்கணும்னும் ஒரு கனவு."

 

சினிமாவைப் பற்றிப் பேசத்துவங்கியதும் அதுவரையிலிருந்த படபடப்பும் வெட்கமுமெல்லாம் விலகி அவள் தெளிவாகவும் கண்களில் கனவுடனும் பேசத்துவங்கினாள். ஜீன் ரென்வா விட்டோரியோ டி சீக்காவைப்பற்றியெல்லாம் ஒரு இருபத்திமூன்று வயதுப்பெண் பேசுவதைக்கேட்டு அவன் வியப்பில் ஆழ்ந்து அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் எதிரே அவன் இருக்கும் உணர்வேயில்லாமல் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தாள். சட்டென்று அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து பேச்சை நிறுத்தினாள். மீண்டும் முகத்தில் வெட்கம் படர்ந்தது.

 

அவள் கேட்காமலேயே அவன் தன்னைப்பற்றிச் சொல்லத்தொடங்கினான். படபடப்பாகவும் அதிகம் கோர்வையில்லாமலும் அவன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவாறு மாயா அமர்ந்திருந்தாள். சினிமாவைப் பற்றி அவன் பேசத்துவங்கியதும் அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். ஐரோப்பிய சினிமாவை எப்படி அதன் வரலாற்றுப் பின்னணியையும் கலாச்சார பின்புலத்தையும் புரிந்துகொண்டு பார்க்கவேண்டுமென்பதை அவன் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக்கொண்டிருந்தபொழுது அவள் சற்றே தலையுயர்த்தி உதடுகள் சிறிது பிரிந்தபடியிருக்க கேட்டுக்கொண்டிருந்தாள். அவனுடைய இடவலமாய் அசைந்துகொண்டிருந்த கண்களையும் நீளமான விரல்களையும் பார்த்தபடி பெரும் வியப்பிலும் கனவிலும் ஆழ்ந்து அமர்ந்திருந்தாள். அவன் பேசுவதைக் கேட்பது ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் அதே பரவசத்தை அவளில் உண்டுபண்ணியது. இடையில் ஒரு முறை தன்னிச்சையாய் சட்டைப்பையிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்தவன் எதுவோ நினைவில் வர மீண்டும் அதை சட்டைப்பைக்குள்ளேயே போட்டான்.

 

தாழ்வாய் பறந்தபடி கடந்து சென்ற ஒரு விமானத்தின் சாப்பிட்டதால் அவன் பேச்சின் கோர்வை அறுபட்டது. நேரம் பார்த்தான். பத்தேமுக்கால் மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. 'நீ சாப்டியா?' என்றான் மாயாவைப் பார்த்து. அவள் இல்லை என்னும்படி தலையசைத்தாள். அவன் 'வா' என்றுவிட்டு எழுந்து கதவைநோக்கி நடடக்கத்துவங்கினான்.

 

பாண்டியன் சாலையை விட்டுவிட்டு சற்று சுற்றிக்கொண்டு ஷோலிங்கநல்லூர் வழியாக அவன் ஈ.சி.ஆர் நோக்கி வண்டியை செலுத்திக்கொண்டிருக்க மாயா அருகில் அமர்ந்திருந்தாள். கடற்கரையிலுருந்த உணவகமொன்றின்முன் வண்டியை நிறுத்தினான். கடலைப் பார்த்தபடி அமர்ந்து அவர்கள் சாப்பிட்டார்கள். சாப்பிட்டுமுடித்ததும் அவன் மீண்டுமொருமுறை 'வா' என்றுவிட்டு நடக்க மாயா தொடர்ந்தாள்.

 

அந்த உணவகத்தைச் சுற்றிக்கொண்டு அவர்கள் கடற்கரையை அடைந்தார்கள். அவன் எதையோ தேடுவதுபோல கடலைப் பார்த்தபடி நின்றிருந்தான். கடல் அதிக இரைச்சலில்லாமலிருந்தது. மாயாவிற்கு ஒரே நேரத்தில் குளிர்வதுபோலவும் வியர்ப்பதுபோலவுமிருந்தது. சிறிது நேரம் அப்படியே மௌனமாய் நின்றிருந்தவன் ஒருமுறை திரும்பி மாயவைப் பார்த்துவிட்டு மீண்டும் கடலைப் பார்த்தவாறு 'ஐ திங்க் ஐ ஹாவ் ஃபாளன் ஃபார் யூ' என்றான்.

 

அவனுடைய படபடப்பையும் வெட்கத்தையும் அவளை கவரவும் மகிழ்விக்கவும் அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் எல்லாம் பார்த்து மாயா ஏறக்குறைய இதை எதிர்பார்த்திருந்தாள். அவன் மறுபடியும் அவள் பக்கம் திரும்பியபொழுது அவள் அவனைப் பார்த்தபடி மெலிதாய் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.

 

அடுத்த நாள் காலை சுபா மாயாவை அழைத்தாள். "என்ன நேத்து சத்தத்தையே காணோம்? ரொம்ப கஷ்டப்படுத்திட்டாரா?" என்றாள்.

 

"ஆமாம்." என்றாள் மாயா சிரித்தபடி.


                                                                    *** 


அவன் மூடிய கண்களினூடாக இருண்ட வனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். விழிகளை எல்லா திசைகளிலும் நகர்த்தி அந்த இருள் பரப்பின் முடிவைத் தேடினான். அடர்ந்த கருமைநிறம் முடிவில்லாமல் விரிந்துகிடந்தது. விரித்துப்போட்ட கரும் பட்டுத்துணிபோலிருந்த இருளின் மென்மையை அவனால் உணரமுடிந்தது. பூமியைப்போலவே வானத்திற்கும் மணமிருந்தது. அவன் முகத்தை சற்று மேல்நோக்கி உயர்த்தி அந்த மணத்தால் அவன் நுரையீரலை நிரப்பிக்கொண்டான். இப்பொழுது வலப்புற ஓரத்தில் வெளிச்சப்பொட்டொன்று தோன்றியது. மெல்ல மெல்ல வெளிச்சத்திலும் அளவிலும் அதிகரித்து அது ஒரு நட்சத்திரமானது. அந்த நட்சத்திரம் அவனைப் பார்த்துச் சிரிப்பதுபோலிருந்தது. அவனுடைய உதடுகளும் மெல்ல விரிந்தன. அவனும் நட்சத்திரத்தைப் பார்த்துச் சிரித்தான். சிறிது நேரத்தில் மேலும் பல வெளிச்சப்பொட்டுக்கள் தோன்றி நட்சத்திரங்களாயின. அவன் பத்துக்கொண்டிருந்தபொழுதே கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் தோன்றி இருளப்பரப்பை முழுவதுமாய் நிறைத்தன. அவன் அதுவரையிலும் உணர்ந்திராத ஆழ்ந்த அமைதியையும் மனம் நிரம்பி வழிவதுபோலான சந்தோஷத்தையும் உணர்ந்தான். வானத்தின் இருண்மையே மறந்துபோய்விடும்படியாயிருந்த நட்சத்திரங்களின் காளியாட்டதைக் கண்டவாறு அவன் கண்களையடைத்துப் படுத்திருந்தான். வானத்தின் மணத்துடன் சேர்ந்து இப்பொழுது நட்சத்திரங்களின் மணமும் அவன் நுரையீரலுக்குள் நுழைந்துகொண்டது. அந்த மணம் அவன் நாசித்துவாரங்களைத் தொட்டுச் சிலிர்க்கச்செய்து பின் மெல்ல உள்நுழைவதை அவனால் உணரமுடிந்தது. பல நாட்கள் ஆண்டுகள் யுகங்களென்று அவன் முடிவில்லாத ஆனந்தத்தில் திளைத்துக்கிடந்தான்.

அப்படி அவன் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைப் பார்த்துப் படுத்திருந்தபொழுது நட்சத்திரமொன்று உதிர்வதைக் கண்டான். சுவற்றில் ஒட்டிவைக்கப்பட்ட பொட்டொன்று விடுபட்டு விழுவதைப்போல அவன் சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு கணத்தில் அந்த நட்சத்திரம் வானத்திலிருந்து விடுபட்டு கீழ்நோக்கி நகரத்துவங்கியது. அவன் மனம் பதைபதைத்து. அது ஒரு காட்சிப்பிழையாக இருக்கக்கூடுமென்று நினைத்து மேலும் அப்படி அவன் நட்சத்திரங்கள் நிறைந்த வனத்தைப் பார்த்தபடி படுத்திருந்தபொழுது நட்சத்திரமொன்று உதிர்வதைக் கண்டான். சுவற்றில் ஒட்டிவைக்கப்பட்ட பொட்டொன்று விடுபட்டு விழுவதைப்போல அவன் சிறிதும் எதிர்பாராத ஒரு கணத்தில் அந்த நட்சத்திரம் வான்பரப்பிலிருந்து விடுபட்டு கீழ்நோக்கி நகரத்துவங்கியதுகவனமாக கண்களை இறுகமூடிக்கொண்டு பார்த்தான். ஆனால் தெளிவாக நட்சத்திரம் கீழ்நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது தெரிந்தது. அதன் வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டிருந்தது. அவன் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே அவனுடைய மூடிய கண்களுக்கு முன்பாகவே அந்தத் துயரம் நடந்து முடிந்தது. வானத்தின் சிறிய பரப்பொன்று வெறுமையானது. பல யுகங்களாய் அவனுக்கும் வானத்துக்கும் பரிச்சயமான எப்பொழுதும் சிரித்தபடியிருந்த நட்சத்திரமொன்று இப்பொழுது இருக்கவில்லை. அவன் கரங்களை உயர்த்தி தடுக்க முயன்றும் அவனால் அதன் வீழ்ச்சியை தடுக்க முடியாமல் போனது அவனை முடிவில்லாத வேதனையில் தள்ளியது. அவனுடைய முகத்தில் அந்த வேதனை தோன்றி மெல்லப் படர்ந்தது. இருள் பரப்பில் தோன்றிய முதல் நட்சத்திரம் அது என்பதை உணர்நதவன் கடுமையான சோர்வுற்றான். இப்பொழுது அந்த முதல் நட்சத்திரத்தைத் தொடர்ந்து மேலும் பல நட்சத்திரங்கள் வானிலிருந்து கீழ்நோக்கி வீழ்ந்துகொண்டிருந்தன. அவன் செய்வதறியாமல் ஆற்றாமையில் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.


சிம்ஹத்தின் மேல் இடக்காலின்மேல் வலங்காலிட்டு அமர்ந்திருந்த தேவியிடம் அவன் வானிலிருந்து நட்சத்திரங்கள் உதிர்வதுபற்றி முறையிட்டான். உடலிலிருந்த தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும் விதமாய் கண்ணீர் விட்டு நட்சத்திரங்களை காக்கும்படி தேவியிடம் மன்றாடினான். உலகாளும் அம்மன் அவனிடம் கருணைகொண்டாள். நட்சத்திரங்களைக் காக்க அவனுக்கு ஓர் வழி சொல்லித்தந்தாள்.


"ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் ஒன்பது சுமங்கலிப் பெண்களைக் கொன்று அவர்களுடைய மாமிசத்தை எனக்குப் படைத்து அதை ப்ரசாதமாய் உட்கொண்டால் வானில் நட்சத்திரங்கள் உதிர்வது நிற்கும்."


அவன் கண்ணீர் விடுவதை நிறுத்தினான். முகம் எதிரேயிருந்து ஒளியூட்டப்பட்டதுபோல பிரகாசமானது. உடல் சட்டென லேசானதுபோலிருந்தது. எத்தனையோ வருடங்களாய் தலையால் முட்டிக்கொண்டிருந்த சுவரொன்று திடீரென இடிந்து வீழ்ந்து அவன் கண்முன்னால் நீண்ட நிலப்பரப்பும் நீல நிற வானமும் விரிந்தது. அவன் தரையில் விழுந்து அம்மனை வணங்கினான். தலையை இடவலமாய் அசைத்தபடி நிறையநேரம் அப்படியே படுத்துக்கிடந்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்து நின்றான்.


                                                                    ***


அடுத்த ஒரு வாரத்திற்கு குறிப்பிடும்படியாய் எதுவும் நடக்கவில்லை. சுவரொன்றில் முட்டிக்கொண்டதைப்போல விசாரணை ஓரிடத்தில் நின்றுவிட்டது. வித்யாசாகர் மாயாவை மறந்து பீளமேடு ஜெயராஜ் வழக்கு குறித்த செய்திகளையும் ஆவணங்களையும் படிப்பதில் மூழ்கிப்போனான். வாசுதேவனுக்கு பீளமேடு ஜெயராஜ் வழக்கில் ஒரு திரைப்படத்துறை தொடர்பு இருப்பதாகவும் ஏதோ ஒரு வகையில் அந்தத் தொடர்பை மாயாவின் கொலையால் விளக்க முடியுமென்றும் தோன்றியது. அவன் அந்தத் திசையிலேயே அதிகம் சிந்தித்துவந்தான். புதன்கிழமையின் மாலை. வித்யாகரும் வாசுதேவனும் சிம்ஸ் பார்க்கில் அமரிந்திருந்தார்கள்.


"வாஸ்." எதையோ ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்த வித்யாசாகர் நினைவுகளிலிருந்து விடுபட்டு வாசுதேவனின் பக்கம் திரும்பி அவனை அழைத்தான்.


"ஹும்."


"வாஸ். ஒரு வாரமா பீளமேடு ஜெயராஜால கொல்லப்பட்ட பெண்களோட தகவல்களையெல்லாம் அலசிக்கிட்டிருந்தேன். ஐ ஃபௌண்ட சம்திங் ஸ்ட்ரேன்ஜ்."


வாசுதேவன் அவனை கேள்விக்குறியுடன் பார்த்தான்.

 

"போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்ட்ஸ்ல விக்டிம்ஸ் கொல்லப்பட்டிருக்கக்கூடிய நேரமும் தேதியும் கிடைச்சுது. எல்லாருமே வெள்ளிக்கிழமைல கொல்லப்பட்டிருக்காங்க."

 

"ஸோ?"

 

"கொல்லப்பட்ட எல்லாருமே பெண்கள். அதுவும் மாயாவை தவிர்த்திட்டுப் பார்த்தா திருமணமான பெண்கள்."

 

வாசுதேவன் வித்யாசாகர் என்ன சொல்லவருகிறான் என்பது புரியாமல் குழப்பத்துடனேயே அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான். வித்யாசாகருமேகூட அதிகம் தெளிவில்லாமல் உரத்து சிந்திப்பதுபோலவே பேசிக்கொண்டிருந்தான்.

 

"அதுவுமில்லாம இதுல மனித மாமிசம் அறுத்தெடுக்கப்பட்டு தின்னப்பட்டிருக்கக்கூடிய ஒரு கோணமுமிருக்கு. கேன் யூ சீ சம்திங்?" என்றான் வாசுதேவனிடம். அவன் இல்லை என்பதுபோல தலையசைத்தான். இப்பொழுது அவனுடைய ஆர்வம் கூடியிருந்தது.

 

"வெள்ளிக்கிழமை. சுமங்கலிகள். மனிதமாமிசம். சீ?"

 

"..."

 

"இது ஏதோ வழிபாட்டுக்காக செய்யப்பட்ட கொலைகள் மாதிரி படலை? நரபலி மாதிரி. எதுவோ வேண்டுதல் நிறைவேற செய்தது மாதிரி?"

 

"இந்த மூணு அம்சங்களை மட்டும் வச்சு அப்படி ஒரு முடிவுக்கு வந்திட முடியுமா?"

 

"வெறுமனே மனித மாமிசத்துக்காக செய்யப்பட்ட கொலைகளாயிருந்தா அதுல இப்படி ஒரு ஒழுங்கு இருந்திருக்காது வாஸ். இதுல விக்டிம்ஸோட தேர்வுலயிருந்து கொல்லப்பட்ட நாள் தேதினு எல்லாத்துலயும் ஒரு ஒழுங்கு இருக்கிற மாதிரி படுது. எந்தவித படபடப்புமில்லாம நிதானமா ஒருவித தெளிவோடயும் அமைதியோடயும் செய்யப்பட்ட மாதிரியிருக்கு."

 

"எல்லா சைக்கோ கில்லிங்ஸ்லயும் அப்படித்தானே வித்யா? ஏதோ ஒருவகை பாட்டர்னும் ஒரு சிக்னேச்சரும் இருக்குமே?"

 

வித்யாசாகர் இந்த எளிமையான விளக்கத்தை யோசித்திராதவன்போல மெலிதாய் திடுக்கிட்டான். மீண்டும் நினைவுகளில் ஆழிந்துபோனான். எதிரில் தெரிந்த நீல நிற மலையை வெறித்தபடியிருந்தான். சற்று நேரத்திற்குப்பின் கொஞ்சம் தெளிவுற்றவனாய் வாசுதேவனை ஏறிட்டான்.

 

"நான் சொல்லறது வேற வாஸ். விக்டிம் ப்ரொஃபைலிங் பத்தி மட்டுமே சொல்லலை நான். ஒரு குறிப்பிட்ட நாள்ல தொடங்கி ஒரு இலக்கை அடைஞ்சதும் கொலைகள் நிறுத்தப்பட்டிருக்கு. அதுக்கப்புறம் அதுமாதிரி கொலைகள் எதுவும் நடக்கலை. கொலைகளுக்கு நடுவுல இருந்த இடைவெளிகூட சீராயிருந்திருக்கு. எல்லாமே ஒரு வழிபாட்டு ஒழுங்கோட செய்யப்பட்ட மாதிரி தெரியுது."

 

"கொலைகள் நின்னதுக்கான காரணம் ஜெயராஜோட தற்கொலைதானே?"

 

"ஹும். ஏதோ ஒரு கணக்கு முடிஞ்சதும் கொலைகளும் நின்னிருக்கு. ஜெயராஜும் தற்கொலை பண்ணிக்கிட்டிருக்கான்."

 

"என்ன கணக்கு?"

 

"மொத்த கொலைகளாயிருக்கலாம்."

 

"ஜெயராஜோட மனைவியையும் அவளோட தங்கையையும் சேர்த்து மொத்தமா பத்துபேர் கொல்லப்பட்டிருக்காங்க."

 

"ஹும்."

 

"நீ சொல்லற வெள்ளிக்கிழமை சுமங்கலி நரபலி தியரிக்கு பத்தவிட ஒன்பது தானேதானே சரியா வரும்?"

 

வித்யாசாகர் மீண்டுமொருமுறை திடுக்கிட்டான்.



Tuesday, October 26, 2021

ஐந்தாவது கொலை - Chapter 4

வித்யாசாகரும் வாசுதேவனும் சிம்ஸ் பார்க்கில் அமர்ந்திருந்தார்கள். வாசுதேவன் கனமான ஸ்வெட்டரும் குல்லாவும் அணிந்திருந்தான். டிசம்பர் மாதக் குன்னூரில் குளிர் அவனை வேரோடு உலுக்கிக்கொண்டிருந்தது. வித்யாசாகர் கழுத்தில் மஃப்ளர் சுற்றியிருந்தான். கண்ணெட்டும் தூரம்வரை புல்வெளிப்பரப்பு நீண்டுகிடந்தது. அதிகமாய் கூட்டமிருக்கவில்லை. குன்னூருக்குள் எங்குபோனாலும் தொடர்ந்துவந்து அவர்களின் எதிரே அமர்ந்துகொண்டு விழித்துப்பார்க்கும் நீலநிற மலை இங்கேயும் வந்திருந்தது. 


"ஜெயராஜ் வழக்குல கொல்லப்பட்ட பெண்கள் தோன்றின படங்களோட கிரெடிட்ஸையெல்லாம் எடுத்தேன் வித்யா." என்றவாறு ஸ்வெட்டருக்குள் கைவிட்டு சட்டை பாக்கட்டிலிருந்து காகிதமொன்றையெடுத்து வித்யாசாகரிடம் நீட்டினான். 


"அந்த படங்கள்ல இன்ஃப்லுவென்ஸ் இருக்கக்கூடிய ஆட்கள். தயாரிப்பாளர்கள் அஸிஸ்டண்ட்ஸ் ப்ரொடக்ஷன் மேனேஜர். இப்படி ஏதோ ஒரு வகைல அந்த பெண்களோட தேர்வுல பங்கிருக்க வாய்ப்புள்ளவங்க."


"குட்." என்றவாறு அந்தக் காகிதத்தில் பார்வைபோட்டான் வித்யாசாகர். 


"கௌதம் நாயரோட படங்கள்ல பெரும்பாலும் முக்கிய பொறுப்புக்கள்ளயிருப்பவங்கயெல்லாம் அவரோட பெருபாலான படங்கள்ல சேர்ந்து வேலைபார்த்திருக்காங்க."


"ஹும்."


"இந்த ஆறு பெண்களும் தோன்றியிருக்கற படங்களை மட்டும் எடுத்துப்பார்தப்போ ஒரு மூணு பேரு கிடைச்சுது. ஒரு இசையமைப்பாளர். ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர். அப்புறம் ஒரு ப்ரொடக்ஷன் மானேஜர். இந்த மூணு பேர்ல யாருக்கு வேணும்னாலும் அந்தப் பெண்களோட தேர்வுல தொடர்பிருக்கலாம்."


"இண்டரெஸ்டிங். இசையமைப்பளருமா?"


"மீட்டூ மூவ்மென்ட்லயெல்லாம் பேரு அடிபட்ட ஆள்." என்று கண்ணைச் சிமிட்டினான் வாசுதேவன். 


"ஹும். ஜெயராஜுக்கு ஏதாவது சினிமா தொடர்பு இருந்திருக்குமா?"


"சினிமா பார்க்கிறதைத்தவிர வேற எந்தத் தொடர்பும் இருந்ததா தெரியல்லை. கௌதம் நாயரோட சொற்கள்ள சொல்லணும்னா ஒரு சராசரி ஆளுமை. கோயமுத்தூரைவிட்டு சென்னைக்கேகூட அதிகம் போயிருக்கறதுக்கான வாய்ப்பு கம்மி."


"அப்படினா சினிமா துறைல இருக்கற ஒரு ஆள் ஏதோ வகைல ஜெயராஜால கொல்லப்பட்ட எல்லா பெண்களோடயும் தொடர்புலயிருந்திருக்கான். அவனுக்கும் ஜெயராஜுக்கும் என்ன தொடர்புன்னு பாக்கணும் இல்லையா?"


"ஆமாம். ஆனா அதே நேரத்துல இது முழுக்கவே ஒரு கோயின்ஸிடென்ஸாவும் இருக்கலாம். இந்த ஆறு பெண்களைத்தவிரவும் நூற்றுக்கணக்கான பெண்கள் இந்தப்படங்கள்ல நடிச்சிருக்காங்க. வேற ஏதோ ஒரு அடிப்படையில ஜெயராஜ் அவனோட விக்டிம்ஸை தேர்ந்தெடுத்தப்போ ஒரு ரேண்டம் கோயின்ஸிடென்ஸாவும் இந்தப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்."


                                                                            ***


அவன் படுக்கையில் படுத்திருந்தான். அஞ்சியபடியே கண்களைத்திறந்து சுவரைப்பார்த்தான். எதிர்புறச்சுவரிலிருந்து யாரோ டார்ச்லைட் அடிப்பதுபோல ஒரு ஒளிவட்டம் தெரிந்தது சுவற்றில். இருண்டிருந்த அறையை எந்தவிதத்திலும் ஒளியூட்டவில்லை அந்த வட்டம். இருந்தும் கண்களை வலிக்கச்செய்யும் ஒளியைப்பார்த்துவிட்டதைப்போல அவன் கண்களை இறுகமூடிக்கொண்டான். போர்வையை இழுத்து தலையை முழுவதுமாய் மூடிக்கொண்டான். எடைமிகுந்த மௌனம் அந்த அறையில் நிறைந்திருந்தது. அவனால் நிறையநேரம் அப்படியிருக்கமுடியவில்லை. போர்வைக்குள் மூச்சுமுட்டுவதாயுணர்ந்தான். போர்வையை அகற்றச்சொல்லி அவனுடைய உள்ளுணர்வு மெதுவாக அவனை உலுக்கத்துவங்கியது. உடலில் வியர்வைத்துளிகள் எதுவும் இருக்கவில்லை. இருந்தும் வியர்ப்பதுபோலிருந்தது. உடலின் அசவுகர்யங்களெல்லாம் வெறும் சாக்குகளென்பதையும் அவனுக்குள் கண்களைத்திறந்து சுவற்றைப்பார்ப்பதற்கான ஆர்வம் கூடிக்கொண்டிருந்ததையும் அவன் அறிந்திருந்தான். அவனுடைய அச்சமே ஒரு வகையில் அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை தூண்டியது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் தோற்கப்போகிறோம் என்பதை அறிந்திருந்தும் அவன் அந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான். கண்களை இறுக மூடி போர்வைக்குள் புதைந்துகிடந்தான். நேரமும் நகராமல் அவனுடைய அடுத்த அசைவிற்காய் காத்திருப்பதுபோலிருந்தது அவனுக்கு. தோற்றுவிட்ட பாவனையுடன் அவன் மெதுவாக போர்வையை கழுத்துவரை இறக்கிவிட்டான். மிகமெதுவாக கண்களைத்திறந்து சுவற்றைப்பார்த்தவன் அதிர்வுற்றான். சுவர் இருண்டிருந்தது. எந்த ஒளிவட்டமுமில்லாமல் வெறுமையாயிருந்தது. அவன் தன்னை ஒரு கோழைபோலுணர்ந்தான். ஒளிவட்டதை அஞ்சி நிறையநேரம் போர்வைக்குள் புதைந்துகிடந்த கோழைத்தனத்தின்மேல் அருவருப்பு எழுந்தது. இரவு முழுவதும் கண்ணடைக்கப்போவதில்லையென்று உறுதிபூண்டான். இனி காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை.


                                                                    ***


"வாஸ். கௌதம் நாயர் ஒருவேளை மாயாவைக் கொண்ணது ஜெயராஜ் இல்லை இன்னொறாள்னு நம்ம ஆர்வத்தைக்கூடறதுக்காகவும் சொல்லியிருக்கலாமில்லயா? நிஜத்தில் அவருக்குத்தெரியவேண்டியது எப்படி மாயா ஜெயராஜ்கிட்ட மாட்டினாங்கறதா இருக்கலாமில்லயா?"


"எதுனால அப்படி சொல்லறே?"


"நம்மளோட இந்த ரெண்டாவது ஆள் தியரி கௌதம் நாயர் எழுப்பின சந்தேகத்தோட அடிப்படைலதான் பலமா நிக்கறமாதிரி தெரியலையா?


"ஆனா இந்த கொலைகள்ல ஒரு சினிமா ஆங்கிள் இருக்கே வித்யா. அதை வேற எப்படி எக்ஸ்ப்ளைன் பண்ண முடியும்?"


"சினிமா ஆங்கிலே கூட இந்த வழக்கு கௌதம் நாயர் மூலமா வந்ததாலதானே நம்ம கண்ணுல பட்டுச்சு. கௌதம் நாயர் ஒரு திரைத்துறை ஆளுமையா இல்லமாயிருந்திருந்தா நாம இவ்வளவு சீக்கிரம் இந்த இடத்துக்கு வந்திருப்போமா இந்த வழக்குல?"


"மே பி நாட். ஆனா இது இதுவைரக்கும் நமக்குதெரிஞ்சு யாரும் பார்க்காத ஒரு கோணம்தானே இந்த கேஸ்ல?"


"இது ஒரு தப்பான கோணம்ங்கறதாலயும் யாரும் பார்க்கமாயிருந்திருக்கலாமில்லயா?


                                                                        ***


ஓபராய் ஷெராட்டனின் பால் ரூமில் வருடாவருடம் தென்னிந்தியாவில் நவம்பர் மாதத்தில் நடக்கும் வைர நகை தயாரிப்பளர்களின் இரண்டு நாள் எக்ஸ்போ நடந்துகொண்டிருந்தது. இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்வான ஃபாஷன் ஷோ முடிந்திருக்க மதுபான விநியோகம் தொடங்கியிருந்தது. மங்கலாக ஒளியூட்டப்பட்டிருந்த அறையில் போடப்பட்டிருந்த மேஜைகளும் நாற்காலிகளும் பள்ளிக்குழந்தைகளைப்போல் வெள்ளையுடையணிந்து உட்கார்ந்திருந்தன. நன்றாக மழித்த முகங்களுடனும் பெரிய தொப்பைகளுடனுமிருந்த வடநாட்டு வைர நகைத் தயாரிப்பாளர்கள் ஃபாஷன் ஷோவில் பங்கெடுத்த சில பெண்களுடன் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். பால் ரூமிற்க்கு வெளியேயிருந்த காரிடோரில் நின்று கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்த மாயாவை அவள் நெருங்கிவந்தாள். கையில் புன்கைந்துகொண்டிருக்கும் சிகரட். 


"ஹலோ."


"ஹாய்."


"சேட்டுங்கப்பூரா உன்னையே சுத்திசுத்தி வந்தாங்க. நீ இங்க தனியா ஃபோன பார்த்திட்டு நிக்கறே?" என கண்ணடித்தாள் அவள். மாயா மெலிதாய் புன்னகைத்தாள். 


அவள் சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து கீழுதட்டைச் சற்று வலப்புறமாய் நகர்த்திவிட்டு புகையை வெளியேற்றினாள். பால் ரூமின் தடித்த கதவை யாரோ திறக்க உள்ளிருந்து இசை கேட்டு கதவு அடைபட்டதும் நின்று அந்த இடம் மீண்டும் அமைதியில் ஆழ்ந்தது. 


"உன்னை மாடலிங் இவண்ட்ஸ்ல அதிகம் பார்த்ததில்லையே? பை தி வே ஐ ஆம் வாமிகா." அவள் நீட்டிய காரத்தைப்பற்றி "மாயா" என்றாள் மாயா. அவள் தலைமுடிக்கு தங்கநிறச்சாயம் அடித்திருந்தாள்.


"நான் சென்னைக்கு வந்து ரெண்டு மாசம்தான் ஆகுது."


"ஓ. வேர் ஆர் யூ ஃப்ரம்?"


"கொயம்பத்தூர்."


"வாட்? இட்ஸ் ஸச் ஏ டெட் சிட்டி. அங்க என்ன பண்ணிட்டிருந்தே?" மாயா புன்னகைத்தாள். 


"பொறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கேதான். படிப்பு முடிச்சிட்டு இப்போ வேலை கிடைச்சு சென்னை வந்தேன்."


"என்ன வேலை?"


"ஹெச்பீல ப்ரொக்ராமர்."


"வாட் த ஃபக்! அப்புறம் எதுக்கு ஐயாயிரம் ரூபாய்க்காக இந்த சேட்டுங்ககிட்ட லோல்பட வந்தே?"


"என்னக்கு படத்துல நடிக்கணும். ஆட்ஸ் அப்புறம் இந்த மாதிரி ஷோஸெல்லாம் பண்ணினா அந்த எக்ஸ்போஷர்ல சினிமா வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்க."


"யார் சொன்னாங்க?" அவள் மாயாவின் முகத்தினருகே நெருங்கிவந்து கேட்க அவள் வாயிலிருந்து வோட்காவின் மணம் வந்தது. மாயா புரியாமல் அவளைப் பார்த்தாள்.


"அதெல்லாம் பெருமாள் கோவில்ல காச்ச்சேரி பண்ணிகிட்டே ஏ ஆர் ரஹ்மான் அதைக் கேட்டு அவரோட படத்துல பாடக் கூப்பிடுவாருனு வெயிட் பண்ணறமாதிரி. சினிமா ஒரு தனி உலகம். அந்த உலகமும் வெளி உலகமும் சந்திச்சுக்கறது ரொம்ப ரேர். உனக்கு சினிமா ஆசையிருந்தா சினிமா உலகத்துக்குள்ளபோய்த்தான் வாய்ப்பு தேடணும். இப்படி சம்பந்தமில்லாத எடத்துல நின்னுட்டிருந்தேனா உன்னோட நேரம்தான் வீணாகும். யூ சீம் லைக் ஏ குட் கிட்." மாயாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 


"என்னோட ஸ்நேகிதி ஒருத்தி இருக்கா. சினிமால சின்ன சின்ன வேஷம் பண்ணறவ. அவ ஒருத்தனப்பத்தி சொல்லியிருக்கா. துரைபாகத்துல இருக்கான். கஞ்சா கேஸ். ஆள புடிச்சுப்போச்சுன்னா உதவி பண்ணுவான். பெரிய டைரக்டர்ஸ்ட்ட எல்லாம் அசிஸ்டண்டா வர்க் பண்ணறவன். உன்னோட நம்பர் குடு. நான் அவளைக் கூப்பிட்டுப்பேசச் சொல்லறேன். யூ சீம் லைக் ஏ குட் கிட்." என்றாள் அவள் இரண்டாவது முறையாக மாயாவின் கன்னத்தை மெதுவாக வருடியவாறு. 


Monday, October 25, 2021

ஐந்தாவது கொலை - Chapter 3

அந்தச் சிறிய அறைக்குள்ளிருந்த எதுவுமே கண்ணுக்குத் தெரியாதபடி அந்த அறையில் கண்கூசச்செய்யும் ஒளி நிறைந்திருந்தது. அவன் அந்த அறையின் ஒரு ஓரத்தில் சுவற்றோடுஒட்டிப் படுத்திருந்தான். கால்மூட்டுகளை நெஞ்சோடு அணைத்து இறுகப்பற்றியிருந்தான். கண்களை மூடியிருந்தும் அந்த ஒளி அவனுடைய இமைகளைத்துளைத்துக்கொண்டு கண்களுக்குளே ஊடுறுவுவதுபோல் உணர்ந்தான். இமைகளே இல்லாததுபோலிருந்தது. வெண்மையான அந்த ஒளி மெல்ல நிறம்மாறி சிகப்புவண்ண ஒளியானது. கண்களைத்திறக்காமலேயே அவனால் அந்த வண்ணமாறுதலை உணரமுடிந்தது. செந்நிற ஒளிக்கடலில் இப்பொழுது வெள்ளைக் குமிழ்கள் தோன்றின. தோன்றிய குமிழ்கள் இணைந்து சதுரங்களும் வட்டங்களும் செவ்வகங்களும் முக்கோணங்களுமாயின. பின் அந்த வடிவங்களெல்லாம் காற்றால் அலைக்கழிக்கப்பட்டதுபோல் சுழன்று சுழன்று ஒளிக்கடலில் மிதந்தன. சிறிது நேரத்தில் இல்லாத அந்தக் காற்று சட்டென்று ஓய்ந்ததுபோல எல்லா வடிவங்களும் உறைந்துபோய் அந்தரத்தில் நின்றன. அவன் அடுத்து என்ன நடக்கபோகிறதென்பதை அறிந்திருந்தான். அதை ஒரே நேரத்தில் அஞ்சுவதுபோலவும் எதிர்நோக்குவதுபோலவும் மாறியது அவன் முகம். இப்பொழுது தொலைவில் மிகத்தொலைவில் எங்கோயிருந்து அவனுக்கு மட்டும் ஒரு ஒலி கேட்டது. இரண்டு பித்தளைக்கிணங்களை முட்டவைத்ததுபோலான ஒலி. அந்த ஒலி அவன் படுத்திருந்த தரைக்குகீழேயிருந்து வருவதுபோல அதைக்கேட்க தரையோடு காதை மெல்ல அழுத்தினான். பத்து வினாடிகளுக்கு ஒன்றென்று சீராகவும் மிகமென்மையாகவும் ஒலித்ததை கேட்டவாறு அவன் படுத்திருந்தான்.


சிவந்த ஒளிக்கடலில் தோன்றிய வடிவங்களும் அந்தரத்தில் நின்றபடி அவனுடன் அந்த ஒலியைக் கேட்டுக்கொண்டிருப்பதாய் தோன்றியது அவனுக்கு. பத்துவிநாடிகளுக்கு ஒருமுறை ஒலித்துக்கொண்டிருந்த ஒலி இப்பொழுது இடைவெளிகுறைந்து ஒலிக்கத்தொடங்கியது. ஒன்பது எட்டு ஏழு ஆறு ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்று என்று இடைவெளி குறைந்துகொண்டே வந்தது. இன்னும் சற்று நேரத்தில் மண்டையைப் பிளக்கச்செய்யும் ஒலியாய் அது மாறுமென்பதையும் அவன் அறிந்திருந்தான். இருந்தும் அவனுடைய வலக்காதை பலமாக தரையில் அழுத்தினான். ஒலிகளுக்கு இடையேயான இடைவெளி இப்பொழுது மிகமிகக் குறைந்திருந்தது. ஒரு வினாடிக்கு நூறு முறையென ஒலித்தது. அந்த நூறையும் அவனால் துல்லியமாய் கேட்கமுடிந்தது. ஒலி கனத்து கனத்து வந்து முடிவாய் ஒலியும் ஒரு வடிவமாய் மாறியது. வடிவமாய் மாறிய ஒலி ஒரு நெற்றிப்பொட்டைப்போலிருந்தது.

 

சிவந்த ஒளிபரப்பில் அசைவற்று நின்றிருந்த வடிவங்கள் இப்பொழுது மெல்ல அசையத்தொடங்கின. மேலும் கீழுமாய் இடவலமாய் நகர்ந்தன. எந்த வடிவமும் இன்னொரு வடிவத்தை தொட்டுவிடாதபடி மிகக்கவனமாக நகர்ந்தன. நேரம் கடக்கக்கடக்க நகர்தலின் வேகம் அதிகரித்துவந்தது. ஒரே விதமாய் நகர்ந்துகொண்டிருந்த வடிவங்கள் இப்பொழுது ஒழுங்கற்று நகர்ந்தன. ஒன்றோடொன்று முட்டிக்கொண்டன. வினாடிகள் நிமிடங்கள் மணிகள் நாட்கள் என நீண்டது அந்த நகர்தல். அவன் கண்களை இறுகமூடி அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒளிவடிவங்களின் காலத்திற்கு வெளியேயுள்ள ஒரு பரப்பில் முடிவற்றதாய் நடந்துகொண்டிருந்த ஒளிவடிவங்களின் நடனம் சட்டென்று நின்றது.

 

எல்லாவற்றையும் இருள் தின்றுவிட்டிருந்தது. தரைப்பரப்பிற்குக்கீழே மிகமிக ஆழத்தில் ஒளியும் ஒலியும் நுழையமுடியாத ஒரு இடத்தில இப்பொழுது இருந்தான் அவன். பல நாட்கள் புலன்களின் சலனமேயில்லாத வெளியொன்றில் காத்துக்கிடந்தான். மிக மெலிதாய் மீண்டும் பித்தளைக்கிணங்கள் முட்டிக்கொள்ளும் ஒலி எழதுவங்கியபொழுது புளிப்பான எதையோ கடித்துவிட்டதுபோல் அவனுடைய முகம் இறுகியது. ஒலிகளுக்கிடையேயான இடைவெளி குறைந்துகொண்டும் சப்தம் கூடிக்கொண்டும்வர சிவந்த ஒளிப்பரப்பில் வெள்ளைநிறக்கோடுகளாலான ஒரு பெண்ணுருவம் கொஞ்சம் கொஞ்சமாக உருவம்பெறத்துவங்கியது. சிம்ஹத்தில் இடக்காலின்மேல் வலங்காலிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணுருவம். நான்கு கரங்களில் மூன்றில் ஆயுதங்களைப்பற்றி ஒன்றை செந்நிற உள்ளங்கை தெரியும்படியாய் வைத்திருக்கும் பெண்ணுருவம். அவன் மார்புக்கூட்டின் எலும்புகள் நொறுங்கிவிடும்படியாய் கால்மூட்டுகளை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டான். அந்தப் பெண்ணுருவுவம் இரண்டாய் நான்காய் பதினாறாய்ப் பல்கி அவனைச் சூழ்ந்தது. முதலில் அவன் நிலையாயிருந்து உருவங்கள் சுழலுவதுபோலவும் பின் உருவங்கள் நினலயிருந்து அவன் சுழலுவதுபோலவும் உணர்ந்தான். வினாடிகள் நிமிடங்கள் மணிகள் நாட்கள் இப்படிக்கழிந்தபின் மீண்டும் சட்டென்று ஒளியும் ஒலியுமற்ற வெளியொன்றில் வீசப்பட்டான். பல ஆண்டுகள் அங்கேயே படுத்திருந்தான்.

 

***

 

இரவு அதற்குப்பின் வித்யாசாகரும் வாசுதேவனும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. வாசுதேவன் படுத்ததும் உறங்கிவிட்டான். வித்யாசாகர் நிறைய நேரம் விழித்திருந்தான். முடிவாக அவனுக்கு உறக்கம் தட்டியபொழுது மெல்ல விடிந்துகொண்டிருந்தது. மதியம் பனிரெண்டு மணியைக் கடந்தபின் தான் வித்யாசாகர் எழுந்தான். வாசுதேவன் மடிக்கணினியில் ஆழிந்திருந்தான். மதிய உணவை முடித்துக்கொண்டு வீட்டிற்குவெளியே புல்வெளிப்பரப்பில் அமர்ந்துகொண்டார்கள். முன்தினம் இரவு பெய்த மழைக்குப்பின் குளிர் சற்றுக் குறைந்திருந்தது.

 

"இது என்ன வித்யா கதையே மொத்தமா கெளதம் நாயரை சுத்தி திரும்பிடுச்சு?" என்றான் வாசுதேவன்.

 

"முதல்ல எனக்கும் குழப்பமாத்தான் இருந்துது வாஸ். ஆனா யோசிச்சுப் பார்த்ததுல எதுவோ ஒரு வகைல இது எதிர்பார்ததுதான்னு தோணிச்சு. சொல்லப்போனா தனக்கு எந்தவித தொடர்புமில்லாத ஒரு வழக்குல கெளதம் நாயர் இவ்வளவு ஆர்வம் கட்டியிருந்தாருன்னாதான் நாம ஆச்சர்யப்படணும்."

 

"ஆனா இது என்ன வகையான தொடர்பயிருக்கும்? நாம இதுவரைக்கும் படிச்ச பத்திரிக்கைச் செய்திகள் எதுலயும் கொல்லப்பட்டவங்களுக்கு இப்படி ஒரு திரைப்படத்துறைத் தொடர்பு இருப்பதா படிச்ச ஞாபகமில்லை."

 

"அதுக்குக்காரணம் எல்லாருமே ஜுனியர் ஆர்டிஸ்ட்ஸ்தான். சின்ன சின்ன வேஷங்கள்ல மூணோ நாலோ படங்களுக்குமேல நடிச்சிருக்கறதா தெரியலை. அப்படி நடிச்சவங்களுக்குக்கூட சினிமால நடிக்கறதுக்கான நிஜமான ஆசை இருந்துதா இல்லை அவங்களுக்கு சினிமாத்துறைலயிருந்த ஏதாவது தொடர்புமூலமா வெறுமனே ஒரு ஆர்வத்துல ஒரு விளையாட்டுபோல இந்தப் படங்கள்ல தோன்றியிருக்காங்களானும் தெரியலை."

 

"ஹும். எப்படியிருந்தாலும் இவங்க எல்லாருக்குமே ஏதோ வகைல சினிமாத்துறையோட ஒரு தொடர்பிருந்திருக்கு."

 

"ஹும்." 

 

கௌதம் நாயர் இதுல எங்க வரார்?”

 

"தெரியலை. அந்த ஆறு பெண்களும் தோன்றியிருக்கற படங்கள்ல அவங்க வெறுமனே கிரௌட் ஷாட்ஸ்ல பாக்கிரௌண்ட்லதான் நிறுத்தப்பட்டிருக்காங்க. டயலாக்ஸ் எதுவும் இல்லை. அதனால அவங்களோட தேர்வுல கௌதம் நாயருக்கு நேரடித்தொடர்பு இருந்திருக்க வாய்ப்பு குறைவுதான். அதுல சில ஷாட்ஸெல்லாம் அவர் இயக்கியிருக்கறதுக்கான வாய்ப்பு கூட இல்லை. அதெல்லாம் பொதுவா அஸிஸ்டண்ட்ஸ் பண்ணற வேலை."

 

"அப்படினா ஜெயராஜ் வழக்குல கொல்லப்பட்ட ஏறக்குறைய எல்லா பெண்களுமே அவரோட படத்துல தோன்றியிருக்காங்கங்கறது அவருக்கு தெரிஞ்சிருக்காதுனு சொல்லறியா?"

 

"தெரியமாயிருக்கறதுக்கான வாய்ப்பு இல்லாமயில்லைனு சொல்லறேன்."

 

"அவர்கிளிடயே கேட்டுப்பார்த்திடலாமே?"

 

"கேக்கலாம். அவராவே தொடர்புல வரேன்னு சொல்லியிருக்காரு. இப்போதைக்கு நாமளா இதைப்பத்திப்போய் கேட்கவேண்டாம். அவரா கூப்பிடும்போது பார்த்துக்கலாம். அவர் குடுத்திருக்கற மெட்டீரியல்ஸ் இன்னும் பாதி கூட படிச்சு முடிக்கல்லை. அதையெல்லாம் முழுசா படிச்சு முடிச்சப்புறம் அதுவரைக்கும் அவர் தொடர்புல வரலைனா நாமளாப்போய்ப் பேசலாம். நீ ஆன்லைன்ல கொஞ்சம் தேடிட்டிரு இந்த சினிமாத்துறை ஆங்கில்லே."

 

வெயில் சற்றுக்கூடியிருக்க அவர்கள் வீட்டிற்குள் வந்தார்கள். வித்யாசாகர் உள்ளறைக்குச்சென்று செய்திவாசிப்பில் மூழ்கினான். வாசுதேவன் முன்னறையில் வந்து மடிக்கணினியை உயிர்ப்பித்தான்.

 

***

 

துரைப்பாக்கம் குருநானக் கல்லூரி வளாகத்திற்குள் திரைபடப்படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. காலை ஒன்பதரைக்கெல்லாம் முடிந்திருக்கவேண்டிய வேலை இன்னும் துவங்கியிருக்கவில்லை. தொலைபேசியை எடுக்காத கதாநாயகியைத் தேடி ப்ரொடக்ஷன் வாகனம் போயிருந்தது. கேட்டிற்கு வெளியேயும் மதிற்சுவரின் மேலேயும் கூட்டம் கூடியிருந்தது. உதவிவேலைகளுக்கு வந்திருந்தவர்களும் ஜுனியர் ஆர்டிஸ்ட்களும் ஷாமியான பந்தலுக்கடியில் அமர்ந்து பொங்கலும் உளுந்துவடையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ப்ரொடக்ஷன் ஆள் ஒருவன் அவர்களை அவசரப்படுத்திக்கொண்டிருந்தான்.

 

"சீக்கிரமா முடிங்கப்பா. லைட்டிங் சரிபார்க்க கேமராமேன் கூப்பிடுறாரு."

 

"உக்கும். மதியானம் மூணு மணிக்கு நடக்கப்போற கூத்துக்கு நிம்மதியா சோறு துண்ணவிடாம இம்சை பண்ணறானுங்க." என்றவாறு பேப்பர் தட்டில் மிஞ்சியிருந்ததை அள்ளி வாயில்போட்டுக்கொண்டு கைகழுவ விரைந்தார்கள்.

 

ஃபிரேமை மானிட்டரில் சரிபார்த்துக்கொண்டிருந்த தடித்த கண்ணாடியணிந்த ஒருவன் எழுந்து சத்தம் போட்டான்.

 

"யாருய்யா ப்ரொடக்ஷன் மேனேஜர்? இப்படி எல்லா ஷாட்லயும் பாக்கிரௌண்ட்ல எதுக்குயா ஒரே ஆளுங்களா நிப்பாட்டி எழவெடுக்கறீங்க? டைரக்டர் கவனிச்சிட்டாருன்னா என்னோட தலியறுப்பாரு."

 

"ரெகமெண்டேஷன்ல வந்த ஆளுங்க சார்."

 

"என்ன மயிறு ரெகமெண்டேஷன்? காலேஜ் ஷாட்ல பின்னாடி பூரா பெரிய பொம்பளைங்களா நிப்பாட்டி வச்சிருக்கே. அறிவு வேண்டாமா? அனுப்பிவிட்டிட்டு சின்ன பொண்ணுங்களா கூட்டியா டக்குனு. உசுர எடுக்காதே. ஓடு."

 

சட்டென்று வேலையில்லாமல் ஆனதில் அவளுக்கு அன்றைய மிச்சப்பொழுதை என்ன செய்வதென்று பிடிபடவில்லை. பாதி சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது எழுப்பிவிட்டிருந்தார்கள். பசித்தது. கையில் பணமும் அதிகம் இருக்கவில்லை. அங்கேயே சிறிது நேரம் சுற்றிக்கொண்டிருந்தவளுக்கு சீக்கிரமே அலுத்துப்போனது. கூட்டத்தைக்கண்டந்து வெளியே ரோட்டிற்கு வந்தாள். அவள் ரோட்டைத் தொட்ட அதே வினாடியில் அவளருகே ஷேர் ஆட்டோவொன்று நிறுத்தத்திற்கு வர அதிகம் யோசிக்காமல் ஏறி அமர்ந்து ஒக்கியத்தில் இறங்கிக்கொண்டாள். அதுவரை காரிலேயே வந்திருந்த அந்தத்தெரு பகல் வெளிச்சத்தில் வேறுமாதிரியாய்த் தெரிந்தது. மேலும் கீழுமாய் மூன்று நான்கு முறை நடந்த பிறகுதான் ஒருமாதிரி பிடிகிடைத்தது. இரண்டு திருப்பங்கள் திரும்பி ஐந்து நிமிடம் நேராக நடந்து அந்தக் காட்டிடத்தையடைந்தாள். பதினைந்து அபார்ட்மெண்ட்களைக் கொண்ட சிறிய குடியிருப்பு. கேட் திறந்துகிடந்தது. வாட்ச்மேனைக் காணவில்லை. அவள் விரைவாய் கேட்டைக் கடந்து உள்ளே போனாள். லிஃப்ட் நான்காவது தளத்திலிருந்து. காத்திருக்காமல் படியேறத்துவங்கினாள். முதல் தளத்தில் எதிர்ப்பட்ட ஒரு நடுத்தர வயது ஆள் இவளை மேலும்கீழுமாய்ப் பார்த்தவாறு கடந்து சென்றான். இரண்டாவது மாடியில் வலப்புறம் கடைசியாயிருந்த பிளாட்டிற்குமுன் நின்று அழைப்புமணியை அமிழ்த்தினாள். இரண்டு நிமிடத்திற்கு உள்ளிருந்து எந்த சப்தமும் கேட்கவில்லை. மறுபடியும் மூன்று நான்கு முறை இடைவெளிவிடாமல் அமிழ்த்தினாள். உள்ளே ப்ளேட்டோன்று தரையில் விழும் சப்தம் கேட்டது. மேலும் ஒரு நிமிட காத்திருப்பிற்குப்பின் கதவு திறக்கப்பட்டது. திறந்த மாத்திரத்தில் குப்பென்று அடித்த புகைமணம் அவளை நிலைகுலையச்செய்தது. அவள் உள்ளே நுழைந்துகொள்ள அவன் கதவைச்சத்திவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டான். அவனைத்தொடர்ந்து அவளும் உள்ளே போனாள். அவன் இருந்த அறை புகைமண்டலமாயிருந்தது. உள்ளே கால் வைத்ததும் அளவுக்கு இருமியது. கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

 

"காலைலயே ஆரம்பிச்சிட்டியா?" அவன் படுத்திருந்த கட்டிலில் அவனருகே அமர்ந்துகொண்டபடி கேட்டாள். சிக்கப்பேரிய கண்களால் அவனைப்பார்த்தவாறு "நீ என்ன இந்நேரத்துக்கு வந்திருக்கே? ஷூட்டில்லே?" என்றான்.

 

"அந்த சிடுமூஞ்சி சோடாபுட்டி தொரத்திவிட்டிரிச்சி. அதுக்கு சின்ன பொண்ணுங்களா வேணுமாம்."

 

அவன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அவனுடைய முகம் அவளை நோக்கித்திரும்பியிருந்தபொழுதும் அவன் வேறு எதையோ பார்த்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது.

 

"என்ன அப்படி பாக்கறே? வேலை இல்லையா உனக்கு இன்னைக்கு?"

 

"குடிக்கிறிய?"

 

"அய்யே. கலங்கார்த்தாலேயேவா. வேண்டா."

 

அவன் எழுந்து அமர்ந்தான். அவளை மெல்லத்தள்ளி படுக்கையில் கிடத்தினான். உடுத்தியிருந்த லுங்கியை கழட்டி கீழேபோட்டுவிட்டு அவள் மேல் படுத்து அவனுடைய உடலால் அவளுடைய உடலை அழுத்தினான். நெருங்கி வந்த அவனுடைய உதட்டைக் கடித்துவிட்டு "எப்பவுமே இந்த நெனப்பு தானா உனக்கு?" என்றாள் அவள். அவள் மேல் சிறிது நேரம் உறைந்துகொண்டிருந்தவன் சட்டென்று விலகிப் படுத்துக்கொண்டான். அவள் அவனை நெருங்கி அவனை உயிர்ப்பிக்க முயன்றாள். அந்த இடம் அமைதியாயிருக்க அவனுடைய மூச்சு விடும் சப்தமும் சுவர்க்கடிகாரத்தின் டிக் டிக்கும் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் சுவாரஸ்யமில்லாமல் படுத்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. நூற்றியைம்பது டிக்கிற்குப்பின் தோல்வியை ஒப்புக்கொண்டு அவள் பின்வாங்கினாள். அவன் சுவர்பக்கமாய் திரும்பிப் படுத்துக்கொண்டான். அவள் அவன் கலைத்திருந்த அவளுடைய உடைகளை சரிசெய்துகொண்டு அவனருகே படுத்துக்கொண்டாள். ஏதோ ஒரு வீட்டிலிருந்து குக்கரின் சப்தமும் ஒரு குழந்தையின் அழுகையும் கேட்டது. ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தவள் படுக்கை மெலிதாய் குலுங்குவதையுணர்ந்து திரும்பிப்பார்த்தாள். அவனுடைய முதுகு அசைந்துகொண்டிருந்தது.

 

"விடுயா. செக்ஸ் மட்டும்தானா உலகத்துல? வேற எவ்ளோயிருக்கு."

 

பட்டென்று எழுந்து அமர்ந்த அவன் பளாரென்று அவள் கன்னத்தில் அறைந்தான்.

 

"பொட்ட நாயே." என்றான் உஷ்ணமாய் அவளை பார்த்தவாறு. அவனுடைய உடல் கோபத்தில் மெலிதாய் நடுங்கிக்கொண்டிருந்தது.

 

அவளுடைய கன்னம் அவன் அறைந்த இடத்தில் எரியத்தொடங்கியது. வலது கையால் தொட்டுப்பார்த்தாள். சுட்டுக்கொண்டிருந்தது. மெதுவாய் கன்னத்தை விரல்களால் தடவியவாறு அவன் கண்களைப்பார்த்து "நானா? நீயா?" என்றாள் அவள்.